UPDATED : ஜன 10, 2024 08:43 AM
ADDED : ஜன 09, 2024 10:26 PM

சென்னை:கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. அந்த கட்சியை மீண்டும் கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க., முயற்சிகளை துவங்கியுள்ளது.
தொகுதிகள் குறித்து பேசுவதற்காக, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தனியாகவும் சென்று, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர்.
இதேபோல, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான பா.ஜ.,வினரும், பிரேமலதாவை சந்தித்து பேசியுள்ளனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், நான்கு லோக்சபா தொகுதிகள் மட்டுமின்றி, ஒரு ராஜ்யசபா பதவியும், பிரேமலதா கேட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், கூட்டணி முடிவை அறிவிப்பதாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம், பிரேமலதா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பின், மாவட்ட செயலர்கள் கூட்டத்தை நடத்தி, கூட்டணி முடிவை தே.மு.தி.க., தலைமை அறிவிக்கவுள்ளது.

