பிணையின்றி விவசாய கடன்: உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு 2025 ஜன. , 1 முதல் அமலுக்கு வருகிறது
பிணையின்றி விவசாய கடன்: உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு 2025 ஜன. , 1 முதல் அமலுக்கு வருகிறது
ADDED : டிச 15, 2024 02:58 AM

புதுடில்லி: சிறு, குறு விவசாயி களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பிணை இன்றி வழங்கப்படும் விவசாயக் கடனுக்கான உச்சவரம்பை, 1.60 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 2025, ஜன.1., முதல் இது அமலுக்கு வருகிறது.
கடந்த வாரம் மும்பை யில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தில், சிறு, குறு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, விவசாயிகளுக்கு, பிணையின்றி வழங்கப்படும் கடனுக்கான வரம்பை 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய உச்சவரம்பை விரைந்து அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், இதுகுறித்து விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
'விவசாய இடுபொருட்களுக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், கடன் வாயிலாக விவசாயிகள் பயன்பெறும் வகையில், உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
'நாடு முழுதும் 86 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு பலனளிக்கும்' என இதுகுறித்து வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் 'கிசான் கிரெடிட் கார்டு' கடன்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடன் கேட்டு, எளிதாக விண்ணப்பிக்கலாம்.
வேளாண் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என, வேளாண் துறை வல்லுனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.