இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு கூட்டணி கட்சிகளிடம் அதிமுக கோரிக்கை
இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு கூட்டணி கட்சிகளிடம் அதிமுக கோரிக்கை
ADDED : செப் 10, 2026 05:51 AM

சென்னை: இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு, கூட்டணி கட்சி தலைவர்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் அக்., 6ல் நடைபெறுகிறது. ஏற்கனவே, அ.தி.மு.க., வெற்றி பெற்ற அந்த இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க., மீண்டும் களமிறங்குகிறது. போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தே.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனை நேற்று முன்தினம் சந்தித்தனர்.
புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோரை நேற்று அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி, பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் சந்தித்து, அ.தி.மு.க.,வை ஆதரிக்குமாறு கேட்டனர்.
இதைத்தொடர்ந்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரையும், அ.தி.மு.க., நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
இது குறித்து முனுசாமி கூறுகையில், “விருப்ப மனுக்களை, கட்சியின் ஆட்சிமன்ற குழு ஆய்வு செய்த பின், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். பா.ம.க., தலைவர் அன்புமணி, தற்சமயம் சென்னையில் இல்லை; வந்தவுடன் அவரை சந்திப்போம்.
அ.தி.மு.க., வெற்றி பெறவே, அந்த தொகுதிகளின் மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், வெற்றி பெற்றவர்கள், சுயலாபத்திற்காக, அந்த மக்களை மறந்து, வாழ்வளித்த இயக்கத்தையும் உதாசீனப்படுத்தி சென்று விட்டனர். மக்கள், இரட்டை இலை சின்னத்திற்கு மீண்டும் ஓட்டு போட்டு, அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்வர்,” என்றார்.
