UPDATED : ஜூன் 21, 2026 03:33 AM
ADDED : ஜூன் 20, 2026 11:09 PM

மதுரை: மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன், குமார் ஆகியோர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். நகர் செயலர் செல்லுார் ராஜுவின் தீவிர ஆதரவாளரான எம்.எஸ்.பாண்டியன், கிருஷ்ணன் ஆகியோர் அக்கட்சியில் நேற்று இணைந்தனர்.
செல்லுார் ராஜுவும் இணைவார் என, சில வாரங்களாகவே பேச்சு எழுந்தது. அதை மறுத்துள்ள ராஜு, 'நான் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தான்' என, தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து த.வெ.க.,வில் இணைந்து வருவதால், மதுரையில் அ.தி.மு.க., கூடாரம் காலியாகிறது. உள்ளாட்சி தேர்தலை கணக்கிட்டு சேர்ந்து வருவதால், கட்சிக்காக ரசிகர் மன்றத்தில் இருந்தே உழைத்து வரும் த.வெ.க., நிர்வாகிகள் தலைமை மீது கோபத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'மதுரை, தேனி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் நிர்மல்குமாருக்கு தரப்பட்ட, 'அசைன்மென்ட்' படி அ.தி.மு.க.,வினர் சேர்ந்து வருகின்றனர்.நிர்மல்குமாரே பா.ஜ., -- அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர் தான். நேரடியாக விஜய் பார்வையில் உள்ளதால், உள்ளூர் கட்சி நிர்வாகிகளை கண்டும், காணாமலும் உள்ளார்.
'அ.தி.மு.க.,வினருக்கு பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்படுவதால், எங்களுக்கு தான் சிக்கல்' என்றனர்.
