தி.மு.க.,வுக்கு போட்டியாக அ.தி.மு.க.,வில் மகளிர் பிரசார குழு: பழனிசாமி திட்டம்
தி.மு.க.,வுக்கு போட்டியாக அ.தி.மு.க.,வில் மகளிர் பிரசார குழு: பழனிசாமி திட்டம்
ADDED : ஜன 25, 2026 04:13 AM

அ.தி.மு.க., சார்பில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 20 பேர் கொண்ட 'மகளிர் பிரசார குழு' அமைக்க அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி உள்ளன. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதல் கட்டமாக ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
அதன்படி, 'அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு தலா 2,000 ரூபாய்; மானிய விலையில் இருசக்கர வாகனம்; தேசிய ஊரக வேலை திட்டத்தை 100லிருந்து 150 நாளாக உயர்த்துதல்' உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகையாக தி.மு.க., அரசு வழங்கும் 1,000 ரூபாய் இரண்டாயிரமாகும் என அ.தி.மு.க., சார்பில் அறிவித்து இருப்பதால், அதிர்ச்சிக்குள்ளான தி.மு.க., தலைமை, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலா 10 மகளிரை நியமித்து, வரும் பிப்., 1 முதல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த 10 பேர் குழுவினர், ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று, தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு செய்துள்ள திட்டங்கள், சலுகைகள் குறித்து, மார்ச் 1 வரை காலை மாலை நேரங்களில் திண்ணை பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்காக நகரம், ஒன்றியம், கிராமங்களில் 10 பேர் குழுக்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க., அறிவித்த ஐந்து திட்டங்களை, மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், 20 மகளிர் கொண்ட பிரசார குழுவை நியமிக்கும்படி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், புதிதாக 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். அதில் 10 ஆண்கள்; ஏழு பெண்கள்; ஐ.டி., விங்கில் இருந்து மூன்று பேர் இடம் பெறுவர். இதற்காக, விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு ஓட்டுச்சாவடிக்கு தலா 40 பேரை அ.தி.மு.க., களம் இறக்குகிறது.
இந்த பணி, பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி, இடைப்பாடி, சங்ககிரி, ஓமலுார், மேட்டூர் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளில், வளர்பிறை வசந்த பஞ்சமி நாளான நேற்று முன்தினம் துவங்கியது.
இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
ஏற்கனவே, பி.எல்.ஏ., - 2 எனும் ஓட்டுச்சாவடி முகவர் பட்டியல், தேர்தல் அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி திட்டங்கள், தேர்தல் அறிக்கை, தி.மு.க., ஆட்சியின் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துரைக்க, ஓட்டுச்சாவடிக்கு 20 மகளிரை நியமித்து, 'மகளிர் பிரசார குழு' அமைக்க கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இந்த குழுவினரும், புதிதாக அமைக்கும் பூத் கமிட்டியில் இடம் பெறுவோ ரும், ஒரு நபருக்கு தலா 10 வீடுகள் என்ற வீதத்தில் நேரில் சென்று பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, மூன்று ஓட்டுச்சாவடிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர்.
இந்த ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாவட்ட செயலர்களுக்கு தேர்தல் பணி குறித்து தகவல் அனுப்புவர். பூத் கமிட்டிகளில் சிறப்பாக செயல்படுவோரை தேர்வு செய்து, பொறுப்புகளை பகிர்ந்து வழங்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -:

