தேர்தலில் வெல்லும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விலை போகாமல் தடுக்க பழனிசாமி புது திட்டம்
தேர்தலில் வெல்லும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விலை போகாமல் தடுக்க பழனிசாமி புது திட்டம்
ADDED : டிச 14, 2025 06:43 AM

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் 75 புதுமுகங்களை களமிறக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், 'இன்றைக்கு பொதுக்குழு உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் தான், நாளைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள்' என்றார்.
சட்டசபை தேர்தலில், 210 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
விசுவாசிகள் அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், புதுமுகங்கள் 50 பேருக்கு 'சீட்' வழங்கப்பட்டது. அதில், பழனிசாமியின் தீவிர விசுவாசிகள் 15 பேர் வெற்றி பெற்றனர். வரும் சட்டசபை தேர்தலில், 75 புதுமுக வேட்பாளர்களை களமிறக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுக்கு பின், தொங்கு சட்ட சபை உருவாகும் நிலை ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக, தன் விசுவாசிகளுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில், பணம் படைத்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் சிலரை தேர்வு செய்து, போட்டியிடும்படி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால், தோல்விக்கு பயந்து, அவர்கள் தயங்கினர்.
இதனால், தகுதியான வேட்பாளர்கள் இல்லாமல், சில தொகுதி களில் அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பாணி எனவே, லோக்சபா தேர்தலில் போட்டியிட தயங்கியவர்களுக்கு, சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார்.
அதே சமயம், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் 15 பேர் வரை, சட்டசபை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளது. மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர, மற்ற அனைவருக்கும் 'சீட்' உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 46 தனி தொகுதிகளில், கடந்த முறை கூட்டணி கட்சி களுக்கு அதிகமாக ஒதுக்கி கொடுத்தும், அக்கட்சிகள் தோல்வி அடைந்தன. எனவே, இந்த தேர்தலில், 35 தனி தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், பகுதி, நகர, ஒன்றிய செயலர்களை வேட்பாளர்களாக ஜெயலலிதா அறிவித்தார்; அவர்கள் வெற்றி பெற்றனர். ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பழனிசாமி ஆலோசித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

