sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தட்டுக்கு வருவதெல்லாம் கெட்டுப்போன இறைச்சியா?

/

தட்டுக்கு வருவதெல்லாம் கெட்டுப்போன இறைச்சியா?

தட்டுக்கு வருவதெல்லாம் கெட்டுப்போன இறைச்சியா?

தட்டுக்கு வருவதெல்லாம் கெட்டுப்போன இறைச்சியா?

3


ADDED : செப் 30, 2024 05:14 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:14 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய காலகட்டத்தில், நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்ற கேள்வி, சைவ பிரியர்களை விட, அசைவ பிரியர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் கொண்டு வரப்படும் இறைச்சி, மெல்ல கொல்லும் விஷம் தான் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட, 3,256 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து, பாதுகாப்பாற்ற முறையில் வந்திறங்கிய ஆட்டு கால்கள் மற்றும் மாட்டு இறைச்சிகளையும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேநேரத்தில் பிரியாணி சாப்பிடும் பலர், வாந்தி, பேதியால் பாதிக்கப்படுவதும், சிக்கன் ஷவர்மா சாப்பிடுவோர் உயிரிழக்கும் சம்பவமும், அசைவ பிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாம் சாப்பிடும் அசைவ உணவு, 100 சதவீதம் சுத்தமானதாகவோ, பாதுகாப்பானதாகவோ இல்லை என்கிறார், சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியின் இறைச்சி அறிவியல் துறை தலைவர் ஆர்.நரேந்திரபாபு.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நம் நாட்டில் இறைச்சி சாப்பிடும் முறையும், வெளிநாட்டினர் இறைச்சி சாப்பிடும் முறையும் மாறுபட்டது. அவர்கள் உறைநிலைப்படுத்தப்பட்ட இறைச்சியையே அதிகம் சாப்பிடுகின்றனர். நாமோ குளிர்நிலை அல்லது வெட்டப்பட்ட சில மணி நேரங்களுக்குள் இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறோம்.

பொதுவாக இறைச்சியில் 6.5 அளவுக்கு அமிலத்தன்மை இருக்கும். அது வெட்டப்பட்டு, 'மைனஸ்' 18 டிகிரியில், 24 மணி நேரத்திற்கு மேலாக உறைநிலைப்படுத்தப்படும் போது, அமிலத்தன்மை இல்லாமல் போய் விடும். நாமோ வெட்டப்பட்ட சில மணி நேரங்களுக்குள் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதால், அமிலத்தன்மை நிறைந்த இறைச்சியையே சாப்பிடுகிறோம்.

இறைச்சியில் அமிலத்தன்மை 6க்குள் இருக்கும் போது நமக்கு பாதிப்பில்லை. வெட்டப்பட்ட இறைச்சியை உறைநிலைப்படுத்தாமல், பல மணி நேரம் வெளியில் வைத்திருந்து, சமைத்து சாப்பிடும் போது, அமிலத்தன்மை அதிகரிக்கும்.

அதனால், செரிமான பிரச்னை, நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படலாம். வெட்டப்பட்ட இறைச்சியை சாதாரண வெப்பநிலையில், நான்கு மணி நேரம் வரை வைத்திருந்தால், அதில் பெரிய அளவில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்காது. அதற்கு மேலாகும் போது, நுண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்கும்.

பொதுவாக இறைச்சியை, 0 முதல் 5 டிகிரி குளிர் நிலையில் வைத்திருந்தால், 24 மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். அதேபோல, மைனஸ் 18 டிகிரி உறைநிலையில் வைத்திருக்கும் இறைச்சியை, ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனாலும், இறைச்சி வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டியை அவ்வப்போது திறந்து மூடும் போது, உறைநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இறைச்சி பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இறைச்சியை ஒரே நேரத்தில் முழுமையாக வெட்டாமல், சிறிது சிறிதாக வெட்டும் போது, நான்கு மணி நேரத்திற்கு பின், ஈஸ்ட் மற்றும் மோல்ட், ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ், கேம்பிலோபாக்டர், சால்மோலெலா, ஈகோலி போன்ற நுண்ணுயிர்களின் பெருக்கம் அதில் அதிகரிக்கும்.

எனவே, சுகாதாரமான இறைச்சியை மக்களுக்கு வழங்கும் வகையில், அனைத்து கடைகளிலும் குளிரூட்டும் வசதி ஏற்படுத்த வேண்டும். இறைச்சியில் 70 சதவீதம் தண்ணீர் தான் இருக்கும். கடைகளில், 'ஏசி' இருந்தால், இறைச்சி நீர் வற்றாமல் இருக்கும். வியாபாரிகளுக்கு எடையும் குறையாது.

எனவே, அடிக்கடி தண்ணீர் தெளிப்பதை விட, குளிரூட்டும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதேநேரத்தில், நம் நாட்டில் இறைச்சியை தொங்கவிட்டு வெட்டும் முறை பின்பற்றப்படுவதால், நுண்ணுயிர்கள் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

நுண்ணுயிர்கள் பாதித்த இறைச்சிகளை, 72 டிகிரி வெப்பநிலையில் வேகவைக்கும் போது, அவை உயிரிழந்தாலும், அதன் மீதான தாக்கத்தால், வாந்தி, பேதி, குடல் பாதிப்பு ஏற்படும். சுகாதாரமற்ற இறைச்சிகள் என உணவு பாதுகாப்பு துறை கண்டறிந்தால், பிடிபடும் நிலையிலேயே பதப்படுத்தி, பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான், இறைச்சியின் தரம் குறித்து சரியான முடிவுகளை அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: பாதுகாப்பான முறையில் இறைச்சியை விற்பனை செய்யவும், ஹோட்டல்களில் சுகாதாரமான முறையில் உள்ள இறைச்சிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும், ஆங்காங்கே சில தவறுகள் நடந்து வருகின்றன. அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வடமாநிலங்களில் இருந்து, போலி முகவரிகளை பயன்படுத்தி, ஆடு, மாடு இறைச்சிகள் தமிழகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அங்கு கிலோ, 500 ரூபாயில் கிடைப்பதால், வியாபாரிகள் விதிமீறி பாதுகாப்பாற்ற முறையில் கொள்முதல் செய்து வருகின்றனர். அவற்றை தடுக்கும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

12 மணி நேரம் கெடாது!

ஆட்டிறைச்சி கூடங்களில் வெட்டப்பட்டு, காலை 7:00க்கு கடைக்கு வரும் இறைச்சி, மாலை 7:00 மணி வரை கெடாது. அதன்பிறகே கெடும். ஆனால், பெரும்பாலான கடைகள், பிற்பகல் 2:00 மணிக்குள் மூடப்படுகின்றன. கடைகளில், 'ஏசி' அமைப்பது அனைத்து வியாபாரிகளாலும் முடியாத விஷயம். அதே நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன இறைச்சியை வியாபாரிகள் விற்பனை செய்வதில்லை. ஆட்டிறைச்சி கூடங்களில் வெட்டாமல், கடைகளில் வெட்டுவோர் மீது, மாநகராட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சபீர் அகமது, தலைவர், ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கம்.



வாங்கும் போது கவனிக்க வேண்டியவை


1. இறைச்சியை நசுக்கி பார்த்தால், அதிலிருந்து தண்ணீர் வரக்கூடாது. அழுத்தி பார்த்தால் உடையக்கூடாது. கோழி இறைச்சியின் மேற்புறங்களில் பச்சை நிற படிவங்கள் இருக்கக் கூடாது.
2. ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பழுப்பு நிறத்தில் இருந்தால், அது பாதுகாப்பானது இல்லை என்பதை உணர வேண்டும். மேலும், வழுவழுப்பு தன்மை இருந்தாலும் வாங்க வேண்டாம்.
3. சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அழுத்தி தொடும் போது, உடனடியாக அதே நிலைக்கு வந்தால், சாப்பிட உகந்த இறைச்சியாகும்.
4. மீனின் கண்ணில் வெளிச்சம் அடித்து பார்த்தால், எதிரே பிரதிபலிப்பதுடன், செவுள்களில் சிவந்த நிறம் இருக்க வேண்டும். நீல நிறத்திலோ, பழுப்பு நிறத்திலோ இருந்தால், சாப்பிட ஏற்றதல்ல. மேலும் வயிற்று பகுதியில், துடுப்பு பகுதியில் காயங்கள் இருந்தால், அந்த மீனை சாப்பிட வேண்டாம்.
5. இறாலில் குடற்பகுதியை அகற்றி இருக்க வேண்டும். தலைப்பகுதியில் மஞ்சள் நிற பொட்டுகள் இருந்தால் பயன்படுத்தக் கூடாது. வழுவழுப்பு தன்மை இருக்கக் கூடாது.



வெளிமாநில இறைச்சி சட்டவிரோதமா?

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும், இறைச்சி வெட்டப்படும் முன், கால்நடை டாக்டர் மற்றும் உள்ளூர் உள்ளாட்சி அமைப்புகளின் சான்றிதழ் பெறுவது அவசியம்.
அத்துடன், உறைநிலை அல்லது குளிர்நிலை என்ற அடிப்படையில், 'பேக்' செய்த தேதி, எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற விபரங்கள் இடம் பெறுவது அவசியம். இறைச்சி உறைநிலை என்றால், எடுத்து வரும் வாகனங்களும், அதே நிலையில் குளிரூட்டப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், வடமாநிலங்களில் இருந்து, இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றாமல், 'தெர்மாகோல்' பெட்டிகளில். ஐஸ் கட்டிகளை மட்டும் வைத்து, சென்னைக்கு இறைச்சிகள் கொண்டு வருகின்றனர். இதுபோன்று சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் இறைச்சிகள், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் வந்து விட வேண்டும். இடையில் தாமதம் ஏற்பட்டால், ஐஸ் கட்டிகள் கரைந்து, இறைச்சி துர்நாற்றம் வீச துவங்கி விடும்.



பதப்படுத்துதலுக்கு பயிற்சி அவசியம்

உள்ளாட்சி அமைப்புகள், உணவு பாதுகாப்பு துறை மற்றும் கால்நடை டாக்டர்கள் அடங்கிய கூட்டு குழு அவசியம். அப்போது தான், சுகாதாரமற்ற இறைச்சி கடைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவும் முடியும். இறைச்சியை பதப்படுத்தும் கூடத்தில், பொட்டலம் பொட்டலமாக இறைச்சிகள் வைக்கப்படும். அவற்றை அடுக்கி வைக்கும் போது, கீழே இருக்கும் பொட்டலம் காலியான பின் தான், மீண்டும் நிரப்ப வேண்டும்.
மாறாக, பாதியளவு குறைந்ததும், மீதமுள்ள இறைச்சியை மேலே எடுக்காமல், புதிய இறைச்சி பொட்டலத்தை மேலே வைத்து விடுகின்றனர். பழைய பொட்டலம் எடுக்கும் போது, அது கெட்டுப்போன இறைச்சியாகி, உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே, இறைச்சிகள் பதப்படுத்துதல், சுகாதாரத்தை காத்தல் குறித்து, அனைத்து வியாபாரிகள், ஹோட்டல் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும், ஆடு, கோழி இறைச்சி வெட்ட, தனித்தனி பலகைகள் பயன்படுத்த வேண்டும்.



பதப்படுத்துதல் கூடம் அவசியம்!

வெளிமாநிலங்களில், கிலோ 500 ரூபாய்க்கு கிடைக்கும் ஆட்டிறைச்சியை, சட்டவிரோதமாக வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இது நட்சத்திர ஹோட்டல்களுக்கு அதிகளவில் விற்கப்படுகிறது. அந்த இறைச்சி சுகாதாரமானதாக இருப்பதில்லை. அதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். அதன் முடிவுகள் வரும் வரை இறைச்சியை பதப்படுத்த, பதப்படுத்துதல் கூடம் அமைப்பது அவசியம்.



Image 1327111
Image 1327116


- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us