UPDATED : மார் 16, 2024 03:53 AM
ADDED : மார் 15, 2024 11:43 PM

தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் பலமான கூட்டணி அமைக்க அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.
அதற்கேற்ப, ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அமைப்பு, பா.ம.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து, அக்கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் மேடையேற்ற திட்டமிட்டு இருந்தார்.
அதன்படி, அ.ம.மு.க.வும் பன்னீர்செல்வமும் கூட்டணியில் இணைந்து விட்டாலும், பா.ம.க., தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு பேச்சு முடிவடையவில்லை. இதனால், அந்த கட்சித் தலைவர்கள் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்ற, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
வரும் 18ல் பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ வாயிலாக பிரசாரம் மேற்கொள்கிறார். அடுத்த நாள் சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்த பொதுக்கூட்டத்தில் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் சேர்த்து பா.ம.க., அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அமைப்பு தலைவர்களையும் மேடையேற்ற அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையில், பா.ம.க.,வுடனான கூட்டணி இன்றோ அல்லது நாளையோ இறுதியாகலாம் எனத் தெரிகிறது.
- நமது நிருபர் -

