தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/கேள்வி மேல் கேள்வி கேட்ட அமித் ஷா; பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பழனிசாமி

கேள்வி மேல் கேள்வி கேட்ட அமித் ஷா; பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பழனிசாமி

கேள்வி மேல் கேள்வி கேட்ட அமித் ஷா; பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பழனிசாமி


ADDED : மார் 04, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தொகுதி பங்கீட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கறாராக இருப்பதால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியதாவது: கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிந்தது. அதன்பின், 2025 ஜனவரியில், பழனிசாமி உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், பல நுாறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகாரில் ராமலிங்கம் சிக்கினார். இதையடுத்து, பழனிசாமி மகன் மிதுன், டில்லியில் பல வாரங்கள் முகாமிட்டும், எதுவுமே நடக்கவில்லை.

எனவே, அமித் ஷாவை கடந்த மார்ச்சில் பழனிசாமி சந்தித்தார். அதன்பின் ஏப்ரலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனால், தே.ஜ., கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லாதது, தொகுதி பங்கீட்டை நடத்தாமல் இருப்பது ஆகிய காரணங்களால், பழனிசாமி மீது பா.ஜ., தலைமைக்கு கோபம் ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, ஊழல் புகாரில் சிக்கியுள்ள தி.மு.க., அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பழனிசாமி கேட்டிருக்கிறார்.

அதற்கு அமித் ஷா, 'அதற்கான வேலை நடக்கிறது. அதை மட்டும்தான் இந்த தேர்தலுக்கான பிளானாக வைத்திருக்கிறீர்களா; உங்களால், தே.ஜ., கூட்டணியின் தேர்தல் பிளான் சொதப்புகிறது. தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றீர்கள். ஆனால், அதை முறையாக செய்து முடிக்கவில்லை.

'தேர்தல் நெருக்கத்திலும், கூட்டணியை வலுப்படுத்தி தொகுதி பங்கீடை சுமுகமாக முடிக்காமல் இழுத்துக்கொண்டே போவது, எதிர் அணியினருக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனால், சென்னை திரும்பியதும் கூட்டணிக் கட்சியினர் அனைவரையும் அழைத்து பேசி, தொகுதி பங்கீட்டை வேகமாக இறுதி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.

மேலும், தென் மாவட்டங்களில் 12, மத்திய மண்டலத்தில் ஏழு, கொங்கு மண்டலத்தில் 13, வடக்கு மற்றும் சென்னை மண்டலத்தில் 10 என, 42 தொகுதிகள் பட்டியலை, அமித் ஷா கொடுத்துள்ளார். அதேபோல், கூட்டணியில் இருக்கும் அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளுக்கு, 25 தொகுதிகளை பிரித்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி, தொகுதி பங்கீடு நடந்தால், பா.ம.க.,விற்கு 18 தொகுதிகள் போக, 150 இடங்களுக்குள் அ.தி.மு.க., சுருங்கி விடும். இதற்கு விருப்பம் இல்லையென்றாலும், அமித் ஷாவிடம் நேரடியாக எதுவுமே பேச முடியாமல், பட்டியலை வாங்கிக் கொண்டு, மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து சொல்வதாக கூறி, பழனிசாமி சென்னை திரும்பி இருக்கிறார்.

தொகுதி பங்கீட்டில் அமித் ஷா நேரடியாக ஈடுபடுவதால், பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை எப்படி கையாள்வது என புரியாமல் பழனிசாமி கடும் குழப்பத்தில் இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

50 சதவீதம் விருப்ப தொகுதிகள்?


பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.நகர், ராசிபுரம், ராஜபாளையம் உட்பட பா.ஜ., கேட்ட தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கவில்லை. இந்த நிலை, வரும் தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதில், அமித் ஷா உறுதியாக உள்ளார். கடந்த உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்களில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டு கிடைத்த இடங்களின் விபரங்களை பழனிசாமியிடம் தெரிவித்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 'வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேளச்சேரி, தி.நகர், மயிலாப்பூர், திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, சிங்காநல்லுார், பழனி, ராசிபுரம் உட்பட 25 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்' என பா.ஜ., கேட்டுள்ளார். அதற்கு பழனிசாமி, 'பா.ஜ., கேட்கும் தொகுதிகளில் பெரும்பாலானவை, அ.தி.மு.க.,விற்கு சாதகமானவை. எனவே, பா.ஜ.,விற்கு ஒதுக்கும் மொத்த தொகுதிகளில், 50 சதவீதம், பா.ஜ., விரும்பும் இடங்களாக இருக்கும்' என கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.



மார்ச் 7, 8ல் பிரசாரம்


தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த 2025 ஜூலை 7 முதல், 'மக்களை காப்போம்;- தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தொகுதிவாரியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, வரும் 7ம் தேதி மாலை 4:30 மணிக்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர்; 8ம் தேதி மாலை 4:00 மணிக்கு பெருந்துறை; மாலை 5:30 மணிக்கு பவானி ஆகிய தொகுதிகளில் பழனிசாமி பிரசார பயணம் மேற்கொள்கிறார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us