தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/அம்மா உணவக மேம்பாடு: ஜெ. ஆன்மா விஜயை பாராட்டும்

அம்மா உணவக மேம்பாடு: ஜெ. ஆன்மா விஜயை பாராட்டும்

அம்மா உணவக மேம்பாடு: ஜெ. ஆன்மா விஜயை பாராட்டும்


ADDED : மே 20, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எப்பவும் நல்லா இருக்கணும்


அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டத்தை தனது ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்த விஜய் நினைப்பது வரவேற்கத்தக்கது. உணவு எப்போதும் தரமாக இருக்க வேண்டும். விலை குறைவாக இருந்தாலும் தரமும் தூய்மையும் போதாது என்றுதான் பலர் அம்மா உணவகத்துக்கு போகவில்லை. அந்த இரண்டையும் கொடுத்தால் ஏழை, எளியோருக்கு பெரிய உதவியாக இருக்கும்.

- செந்தில்குமார், ஒண்டிப்புதூர்.

திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்


ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் அண்ணாதுரை. அம்மா உணவகங்களுக்கு வசதிபடைத்தவர்கள் யாரும் செல்வதில்லை. அது ஏழைகளுக்கு செய்யும் சேவை. இறைவனுக்கு செய்யும் சேவைக்கு சமம். அதனால் தான் முதல்வர் உணவு தரத்தை உயர்த்தி திட்டத்தை தொடர உத்தரவிட்டு இருக்கிறார். திட்டத்தில் எல்லோரும் பயன்பெறும் வகையில் அவர் விரிவுபடுத்த வேண்டும்.

- லட்சுமி, துடியலுார்.

நல்ல மனம் வாழ்க


நல்ல விஷயங்களை யார் துவக்கினால் என்ன அது யார் திட்டமாக இருந்தால் என்ன அதை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு ஒரு நல்ல மனசு வேண்டும். அது புதிய முதல்வருக்கு இருக்கிறது. அதனால் பாரபட்சமில்லாமல் நல்ல திட்டங்கள் தொடர்கின்றன. அதில் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டமான அம்மா உணவகங்கள் பெயரை கூட மாற்றாமல் தொடர்வதை நிச்சயமாக வரவேற்கிறோம்.

- சிவராமன், கே.வடமதுரை

பசி போக்கும் அருமருந்து


பசித்தவர்களின் துயர் தீர்க்கும் அருமருந்து அம்மா உணவகங்கள். மலிவான விலைக்கு வழங்கப்படும் உணவு இயலாதவர்கள், இல்லாதவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. அவற்றை மேம்படுத்தி தரமான உணவு வழங்க உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துதல் என்ற சொல்லை முக்கியமானதாக கருதுகிறேன். முதல்வருக்கு மனமார்ந்த நன்றி.

- ஹரிஹரன், கோவைப்புதூர்

வரவேற்கதக்க செயல்


கடந்த ஆட்சியிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டன. ஆனால், உணவு தரமா என்றால் சந்தேகமே. வேறு வழியின்றி, அரசு மருத்துவமனை வளாகத்தில் வாங்கி சாப்பிட்டவர்களை பார்த்திருக்கிறேன். யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதைப் பார்க்காமல், முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

- ஜீவிதா, கல்வீரம்பாளையம்

சரியான நேரம் தான்


விற்கிற விலைவாசியில் ஏழை மக்கள் ஆரோக்கியமான உணவுகளை எல்லாம் சாப்பிட முடியாது. கொரோனா காலத்தில் கூட அம்மா உணவகம் தான் பல ரின் பசியை போக்கியது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த காலத்தில் அம்மா உணவகத்தை மேம்படுத்தி தரமான உணவு வழங்குவது அவசியமானது. இது நிச்சயமாக ஏழைகளுக்கு உதவியாக இருக்கும்.

- ஜார்ஜ் விக்டர், உக்கடம்

ஏழைகளுக்கு பேருதவி


அம்மா உணவகம் அருமையான திட்டம். கையில் 5 ரூபாய் இருந்தால் ஒரு வேளை, 10 ரூபாய் இருந்தால் 2 வேளை சாப்பிட முடியும். கூலி தொழிலாளிகள் ஒவ்வொரு வேளையும் 100, 200 கொடுத்து வெளியில் சாப்பிட முடியாது. அம்மா உணவகத்தில் 200 ரூபாய் இருந்தால் 7 பேர் திருப்தியாக சாப்பிடலாம். த.வெ.க ஆட்சியில் அதை மேம்படுத்துவதை மனமார வரவேற்கிறேன்.

- அந்தோணியம்மா, புலியகுளம்

இது பெரும் புண்ணியம்


அம்மா உணவகம் அற்புதமான திட்டம். 30 ரூபாய் இருந்தால் மதிய உணவு சாப்பிட்டு விடலாம். 20 ரூபாய்க்கு காலை உணவு சாப்பிடலாம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதை உதாசீனம் செய்தது வருந்தத்தக்க நடவடிக்கை. விஜய் மீண்டும் செயல்படுத்த முன் வந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம் வரவேற்கலாம். சாப்பாடு விஷயத்தில் செலவை பார்க்காமல் நல்லது செய்வது பெரிய புண்ணியம்.

- காளிஸ்வரன், தெலுங்குபாளையம்

சரியான நடவடிக்கை


கூலி வேலை செய்வோர், மேன்ஷனில் தங்கியிருக்கும் இளைஞர்கள், வயதானவர்கள் எல்லாம் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகின்றனர். அங்கு தரும் உணவை தரம் உயர்த்துவது சிறந்த முன்னெடுப்பு. தற்போது காஸ் தட்டுப்பாடு இருக்கும் சூழலில் கூட, ஏழை மக்களின் பசியாற்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், மக்களுக்கு இன்னும் நெருக்கமாகி விட்டார் விஜய்.

- கண்ணபிரான், கோவில்பாளையம்

சிறுதானிய உணவு தரலாம்


ஜெயலலிதா துவக்கிய திட்டம். ஏழை எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்களுக்கு வரமாக இருக்கிறது. அம்மா உணவகத்தை கருணாநிதி உணவகம் என மாற்றுவதற்கு எதிர்ப்பு வந்ததால், திமுக அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை. விஜய் அப்படி வேறுபாடு பாராமல் செயல்படுவது நல்ல விஷயம். இட்லி, சாம்பார் சாதம் தவிர, சிறுதானிய உணவுகளும் வழங்கினால் நல்லது.

- அப்பாஸ், குறிச்சி

மாற்றம் தேவை தான்


அம்மா உணவக திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கினாலும், அதே பெயரில் செயல்படுத்த அக்கட்சியினர் வலியுறுத்தியதால், தி.மு.க. ஆட்சியில் அரை மனதாக உணவு வழங்கப்பட்டது. எந்த கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தவில்லை. திட்டத்தை யார் தொடங்கினாலும் மக்களுக்கான சேவை சிறப்பாக இருக்க வேண்டுமென முடிவெடுப்பது சிறந்த தலைமை பண்பின் அடையாளம்.

- திவ்யா, செட்டிபாளையம்

கண்காணிப்பு அவசியம்


விலைவாசி தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வரும் வேளையில், மூன்று வேளையும் தரமான உணவு குறைந்த விலையில் கிடைத்தால், அது எளிய மக்களின் பசியை ஆற்றுவதோடு வாழ்வாதாரத்திற்கும் துணையாக இருக்கும். அறிவிப்போடு நிற்காமல், அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பையும், உணவு தரத்தையும் தொடர்ந்து கண்காணித்தல் மக்கள் மனதார பாராட்டுவார்கள்.

-சுப்பிரமணியன், பவர்ஹவுஸ்

ஒரு ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை, அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் நிறுத்தக்கூடாது. ஆனால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாற்றி மாற்றி பல திட்டங்களை கிடப்பில் போட்டு வந்துள்ளனர். விஜய் அந்த மாதிரி இல்லாமல், தி.மு.க. கைவிட்ட அம்மா உணவகத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக ஜெயலலிதாவின் ஆன்மாவே விஜயை பாராட்டும்.
- மோகன்ராஜ், உக்கடம்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us