sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு: உறுதி செய்தது தேவஸ்தானம்

/

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு: உறுதி செய்தது தேவஸ்தானம்

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு: உறுதி செய்தது தேவஸ்தானம்

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு: உறுதி செய்தது தேவஸ்தானம்

5


UPDATED : செப் 21, 2024 01:53 AM

ADDED : செப் 21, 2024 01:20 AM

Google News

UPDATED : செப் 21, 2024 01:53 AM ADDED : செப் 21, 2024 01:20 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவில், ஏழுமலையான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று உறுதி செய்தது.

இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆந்திர அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா உத்தரவிட்டார்.

ஆந்திராவில், கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., அடங்கிய தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வராக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

கலப்படம்


சமீபத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு, திருப்பதி லட்டு பிரசாதத்திலும் முறைகேடு செய்துள்ளது.

'அந்த ஆட்சியில் வழங்கப்பட்ட லட்டுவில், நெய்யில் கலப்படம் செய்ததோடு மட்டுமல்லாமல், விலங்கு கொழுப்பையும் சேர்த்துள்ளனர்' என குற்றஞ்சாட்டினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு, பரிசோதனைக்காக நெய் அனுப்பப்பட்டதில், அதில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்ததாக, தெலுங்கு தேசம் கட்சி செய்தி தொடர்பாளர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் ஆந்திராவில் மட்டுமல்லாமல், நாடு முழுதும் புயலைக் கிளப்பியது. 300 ஆண்டுகளுக்கும் மேல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று உறுதி செய்தது.

இது குறித்து, தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் நேற்று கூறியதாவது:


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலராக நான் பொறுப்பேற்றதும், பிரசாதமாக வழங்கப்படும் நெய் மற்றும் மிகவும் புனிதமானதாக கருதப்படும் லட்டுவின் தரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்தார்.

துாய்மையான பசும்பால் நெய் கிடைப்பது உள்ளிட்ட இந்த கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, அதற்கான வேலைகளை நாங்கள் துவங்கினோம். நெய்யில் கலப்படத்தை பரிசோதிக்க எங்களிடம் ஆய்வகம் இல்லை. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லை.

எச்சரிக்கை


நெய் கொள்முதல் செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட விலை மிகவும் ஆச்சரியம் அளித்தது. சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. 1 கிலோ, 300 - 400 ரூபாய் வரை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சப்ளை செய்யப்பட்ட நெய் ஆய்வக சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், கருப்புப் பட்டியலில் சேர்ப்போம் என, அனைத்து சப்ளையர்களையும் எச்சரித்தோம். அனைத்து மாதிரிகளையும் சேகரித்து, ஜூலை 6-ம் தேதி குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் உட்பட 10 ஆய்வகங்களுக்கு அனுப்பினோம்; ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளித்தன.

ஆய்வில், நெய்யில் காய்கறி கொழுப்பு, விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பன்றிக் கொழுப்பு, பாமாயில், மாட்டிறைச்சி கொழுப்பு, திராட்சை விதை, ஆளிவிதை உட்பட மீன் எண்ணெய் ஆகியவையும் சேர்க்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் ஏ.ஆர்.புட்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய 4 டேங்கர் நெய்யிலும், விலங்கு கொழுப்பு உள்ளிட்டவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

கருப்பு பட்டியல்


பரிசோதனைக்கு உட்பட்ட நெய் மாதிரியில் இவையெல்லாம் ஒரு கலவையாக இருந்தன. துாய பால் கொழுப்பின் அளவு, 95.68 - 104.32 வரை இருக்க வேண்டும்.

ஆனால், அந்த நெய் மாதிரிகளில், 20 என்ற அளவே இருந்தன. அதாவது, நெய்யில் அதிக கலப்படம் உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து நெய் வாங்குவதை நிறுத்தி விட்டோம்.

புகாருக்குள்ளான நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இனி அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் துவங்கும்.

நெய் வினியோகத்தை மேம்படுத்தவும், எங்கள் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஒரு நிபுணர் குழுவை அமைத்துஉள்ளோம்.

தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ஆய்வகம் அமைக்க நிபுணர் குழுவை கேட்டுக் கொண்டுள்ளோம். எனவே, எதிர் காலத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாது. திருப்பதி கோவில் பிரசாதத்தின் புனிதம் மீட்டெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான நட்டா, தொலைபேசியில் நேற்று பேசினார்.

அப்போது, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

''இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்,'' என, மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

இதற்கிடையே, திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகி சுப்பா ரெட்டி தாக்கல் செய்த மனுவை, வரும் 25ல் விசாரிப்பதாக, ஆந்திர உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு


அந்த மனுவில், 'லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட புகார் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்றம் அமைக்கும் குழு அல்லது சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் ஒருவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'இது, ஹிந்துக்களின் மத உணர்வு மற்றும் பாரம்பரியம், நடைமுறைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுப்போம்!


உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலை, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., அரசு இழிவுபடுத்தி உள்ளது. தரமற்ற உணவுகளை வழங்கி புனிதத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமின்றி, பக்தர்களின் உணர்வுகளையும் ஜெகன்மோகன் ரெட்டி புண்படுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் ஆதாரம் கிடைத்தவுடன், காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

--சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்

பாதுகாப்பு வாரியம்!


திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான வாரியம் பதிலளிக்க வேண்டும். கலப்பட லட்டுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் ஆந்திர அரசு உறுதியாக உள்ளது. நாட்டில் உள்ள கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில், 'சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்' அமைக்கும் நேரம் வந்து விட்டது. சனாதன தர்மம் எந்த வடிவத்திலும் இழிவுபடுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

-பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர், ஜனசேனா

'கடவுளின் பெயரால் அரசியல்'

முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி நேற்று கூறியதாவது:சந்திரபாபு நாயுடுவின் முதல் 100 நாட்கள் ஆட்சியில், மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர். தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. இது குறித்து மக்கள் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். இதை திசை திருப்பவே, லட்டு பிரச்னையை எழுப்பி உள்ளார். நெய் கலப்பட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது நியாயமா? கடவுளின் பெயரால் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்து வருகிறார். முதல்வராக இருக்கும் ஒருவர், இப்படி பொய் பேசலாமா? ஆய்வக சோதனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிகள், சோதனைகள் மற்றும் முடிவுகள் அனைத்தும், தே.ஜ., கூட்டணி அரசின் கீழ் நடந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us