அண்ணாதுரை நினைவு தின நிகழ்ச்சி: உதயநிதி ஆப்சென்ட்; ஸ்டாலின் 'அப்செட்'
அண்ணாதுரை நினைவு தின நிகழ்ச்சி: உதயநிதி ஆப்சென்ட்; ஸ்டாலின் 'அப்செட்'
ADDED : பிப் 04, 2026 04:52 AM

சென்னையில் நடந்த அண்ணாதுரை நினைவு தின நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளாதது, தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர், சென்னையில் அண்ணாதுரை நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனர்.
பேரணி முடிவில் , நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார் . இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கவில்லை. அதேபோல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், மதியம் சமபந்தி விருந்தில் உதயநிதி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை.
இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வை நிறுவிய அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் பேரணியாக சென்று, மரியாதை செலுத்துவர் என கட்சி தலைமை அறிவித்தது.
பேரணி துவங்கும் இடத்திற்கு காலை 7.45 மணிக்கு முதல்வர் வந்தார்; அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால், துணை முதல்வர் உதயநிதி வரவில்லை.
அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மதியம் நடத்தப்படும் சமபந்தி விருந்தில் உதயநிதி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது; அந்நிகழ்ச்சிக்கும் அவர் வரவில்லை.
கட்சி நிறுவனர் அண்ணாதுரை நினைவு தினத்தில் உதயநிதி பங்கேற்காதது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், காலை 10:23 மணிக்கும், 11:18 மணிக்கும் அண்ணாதுரை குறித்து, உதயநிதி சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டார். இரு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி கலந்து கொள்ளாததால், முதல்வர் 'அப்செட்' ஆகி உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

