பார்லி., நிலைக்குழு நியமனங்களால் சிக்கல்: ஜெயா பச்சனை போல மஹுவாவும் மாற்றம்?
பார்லி., நிலைக்குழு நியமனங்களால் சிக்கல்: ஜெயா பச்சனை போல மஹுவாவும் மாற்றம்?
ADDED : அக் 04, 2024 02:26 AM

பார்லிமென்ட் நிலைக்குழுவில் இருந்து சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன் விலகிவிட்ட நிலையில், தன்னையும் வேறொரு நிலைக்குழுவுக்கு மாற்ற வேண்டுமென்று திரிணமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா கோரிக்கை வைத்துள்ளதால் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
பா.ஜ., மூத்த எம்.பி., நிஷிகாந்த் துபே. பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சிகளை நோக்கி கடுமையாக பேசி அதிரடி காட்டக் கூடிய இவர் மீது அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வழக்கம்.
திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ராவும் நன்றாக பேசக்கூடியவர். இவரும், நிஷிகாந்த் துபேவும் துவக்கத்தில் நண்பர்களாகத்தான் இருந்தனர்.
கடந்த ஆட்சியில், காங்., மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவில் இருவருமே உறுப்பினர்கள். அப்போது, இருவருமே கடுமையாக மோதுவது வழக்கம்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் அறிவுரையின்படி, பார்லிமென்ட்டில் கேள்வி கேட்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை மஹுவா மொய்த்ரா வாங்கினார் என்றும், இவருக்காக வேறொரு நபர் வெளிநாட்டிலிருந்து கேள்விகளை தயாரித்து அனுப்புவதாகவும், நிஷிகாந்த் துபே எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு எம்.பி., பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டார். ஆனாலும், கடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு எம்.பி.,யாகி வந்துள்ளார்.
இந்நிலையில்தான், பார்லிமென்ட் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கான தலைவர்கள் மற்றும் அந்தந்த குழுக்களில் இடம்பெறும் எம்.பி.,க்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவுக்கு பா.ஜ.,வின் மூத்த எம்.பி.,யான நிஷிகாந்த் துபே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் மஹுவா மொய்தராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையில் கடும் பகை இருக்கும் நிலையில், நிலைக்குழு ஆலோசனைக் கூட்டங்களில் அது மீண்டும் சங்கடத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் உள்ளது.
இதை தவிர்க்கும் வகையில், மஹுவா மொய்த்ராவை அந்த குழுவிலிருந்து எடுத்துவிட்டு, வெளியுறவு அல்லது வேறொரு குழுவில் உறுப்பினராக நியமிக்கும்படி திரிணமுல் காங்., சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து நிஷகாந்த் துபே நேற்று கூறுகையில், “கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிடுவோம். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் வகையில், கைகோர்த்து இணைந்து செயல்படலாம் வாருங்கள்,” என கூறியுள்ளார்.
ஏற்கனவே, இதே குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட சமாஜ்வாதி எம்.பி.,யான ஜெயா பச்சன், தன்னை வேறொரு குழுவுக்கு மாற்றிவிடும்படி கோரிக்கை வைத்து, அதை ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டார். இதேபோல், மஹுவா மொய்த்ராவும் வேறு குழுவுக்கு மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

