பா.ஜ., - அ.தி.மு.க., குறைபாடுகளை பரப்புங்க! அறிவாலயம் அறிவுறுத்தல்
பா.ஜ., - அ.தி.மு.க., குறைபாடுகளை பரப்புங்க! அறிவாலயம் அறிவுறுத்தல்
UPDATED : பிப் 10, 2024 06:51 AM
ADDED : பிப் 10, 2024 12:22 AM

திருச்சி:லோக்சபா தேர்தலையொட்டி, தி.மு.க., நிர்வாகிகள், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., பற்றிய செய்திகளை, ஒரு நாளைக்கு, 20 சமூக வலைதள பக்கங்களில் 'பார்வர்ட்' செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன.
ஆளுங்கட்சியான தி.மு.க., தேர்தலுக்கான பணிகளை, மற்றவர்களைக் காட்டிலும் துரிதமாக செய்து வருகிறது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற, எதிர்க்கட்சிகள் மேல் மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டும் என்பதை வியூகமாக வைத்து, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., பற்றிய குறைபாடு செய்திகளை, தி.மு.க.,வின் ஐ.டி., விங் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.
அந்த செய்திகள் அனைத்து மக்களிடமும் சென்றடைந்தால், தி.மு.க.,வை மக்கள் ஆதரிப்பார்கள் என்ற கணக்கோடு, தி.மு.க., - ஐ.டி., விங் இதை செய்து வருகிறது.
இந்நிலையில், தி.மு.க.,வின் ஐ.டி., விங் வாயிலாக, சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., தொடர்பான செய்திகளை, ஒவ்வொரு தி.மு.க., நிர்வாகியும், தினமும், 20 வாட்ஸாப் குரூப்புகள், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்று, கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இதன் வாயிலாக மொபைல்போன் பயன்படுத்தும் அனைத்து மக்களிடமும், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வின் குறைபாடுகள் சென்றடையும் என்றும், அதன் வாயிலாக லோக்சபா தேர்தலில் கூடுதல் ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும், தி.மு.க., தலைமை நம்புகிறது.