UPDATED : அக் 02, 2024 04:41 AM
ADDED : அக் 01, 2024 07:13 PM

கிருஷ்ணகிரி:'சொல்வதும் ஒன்றும்; செய்வது ஒன்றுமாக செயல்படுகிறார்' எனக் கூறி, சமீபத்தில் திருச்சியில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கொந்தளித்து போர்க்கொடி உயர்த்தினர்.
இதே போன்றதொரு சூழல், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இருப்பதாகவும் அப்போது அவர்கள் கூறியிருந்தனர். சீமான் மீது அவர்கள் வைத்து குற்றச்சாட்டுக்களை அலட்சியத்தோடு கண்டுகொள்ளாமல் விட்டார் சீமான்.
இந்நிலையில், அதே போன்ற கருத்துக்களோடும் அதிருப்தியோடும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருக்கும் கட்சி நிர்வாகிகளும், சீமானுக்கு எதிராக கொந்தளிக்கத் துவங்கி உள்ளனர்.
கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல செயலர் கரு.பிரபாகரன் தலைமையில், ஊத்தங்கரை தொகுதி செயலர் ஈழமுரசு, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலர் ஐயப்பன், கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் திருமூர்த்தி, பர்கூர் தொகுதி செயலர் அப்துல் ரகுமான், கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்டச்செயலர் காசிலிங்கம், ஒன்றிய செயலர் செல்வா உட்பட, 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சி செயல்பாடுகளிலிருந்து விலகி, சீமானுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இது தொடர்காக, நா.த.க., கிருஷ்ணகிரி மண்டல செயலர் கரு.பிரபாகரன் அளித்த பேட்டி:
ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகவும், தமிழ் தேசியம் மலரும் என்ற ஆர்வத்திலும், கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன், நா.த.க.,யில் சேர்ந்தேன். சேரும்போது ஓரிருவர் மட்டுமே என்னுடன் கட்சிக்கு வந்தனர். அதன்பின், வீடு வீடாக சென்று, ஆட்களை சேர்த்தோம். தமிழர்களின் வளர்ச்சிக்காக சீமான் உழைப்பார் என்று நம்பினோம்.
பல்வேறு அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு நடுவே, போராட்டங்களில் பங்கேற்று, 200 முறைக்கு மேல் கைதாகி உள்ளோம். படித்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் எங்களை நம்பி கட்சியில் இணைந்தனர். இதன் பலனாக கடந்த லோக்சபா தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றோம்.
இதில், எங்களின் உழைப்பு அதிகம்.
ஆனால், இதை சீமான் கண்டு கொள்ளவே இல்லை. அவருடைய செயல்பாடுகள் முழுதும் மாறிப்போய் விட்டது. தொண்டர்களை தம்பி என்றழைத்து, நினைத்தபோதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களால், அவரை நெருங்கவே முடியவில்லை. மாநில பொறுப்பாளர்கள் பலர் நீக்கப்பட்டனர்; சீமான் மீதான அதிருப்தியில் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். மதுரை, சென்னை, சேலம், தஞ்சை, ராமநாதபுரம் பகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் இதேபோன்ற காரணங்களால் வெளியேறி விட்டனர்.
கட்சியில் சேரும்போது, செல்வந்தர்களாக இருந்தோம். கட்சி, பொதுக்கூட்டம், நிர்வாக செலவுகளுக்காக அவற்றை இழந்து, இன்று தினக்கூலிகளாகி உள்ளோம். பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளோம். ஆனால், சீமான், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், பணம் படைத்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் தான் செல்கிறார். எங்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை.
இப்படிப்பட்ட நிலையில், கட்சியால் இன்னும், 50 ஆண்டுகள் ஆனாலும், ஆட்சிக்கு வர முடியாது. விரைவில் தமிழ் தேசிய வளர்ச்சிக்காக போராடும் கட்சிகளுடனோ அல்லது புதிய அமைப்பையோ உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

