கவர்னர்கள் அரசியலுக்கு வரலாமா? முந்தைய உதாரணங்கள் இதோ!
கவர்னர்கள் அரசியலுக்கு வரலாமா? முந்தைய உதாரணங்கள் இதோ!
ADDED : மார் 19, 2024 02:31 AM

நம் அரசியலமைப்பு சட்டத்தில், கவர்னர் என்ற அரசியலமைப்பு சட்டப் பதவியில் இருந்தவர், அரசியலுக்கு திரும்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. ஆனால், பொதுவாக, அரசியலில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டு வந்ததால், அது ஒரு நடைமுறையாக இருந்தது.
கேரள பா.ஜ., தலைவ ராக இருந்த கும்மணம் ராஜசேகரன், 2018 மே முதல் 2019 மார்ச் வரை, மிசோரம் கவர்னராக இருந்தார். அந்தப் பதவியை ராஜினாமா செய்த அவர், 2019 லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
உத்தரகண்ட் கவர்னராக, இருந்த பேபி ராணி மவுரியா, 2018 ஆக.,ல் பதவியேற்றார். அவர், 2021, செப்டம்பரில் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த, 2022ல் நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இரண்டாவது ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி, 1948 ஜூன் 21 முதல், 1950, ஜன., 26 வரை அந்தப் பதவியில் இருந்தார். அதன்பின் அரசியலுக்கு வந்தார். நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.
வல்லபபாய் படேலின் மறைவுக்குப் பின், உள்துறை அமைச்சரானார். கடந்த, 1952 முதல் 1954 வரை, மதராஸ் மாகாண முதல்வராகவும் இருந்தார்.
மறைந்த பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜின் கணவரான் ஸ்வராஜ் கவுஷல், 1990 முதல் 1993 வரை மிசோரம் மாநில கவர்னராக இருந்தார்.
பிரபல கிரிமினல் வழக்கறிஞரான அவர், 1998 முதல் 2004 வரை, ஹரியானாவின் ஹரியானா விகாஸ் கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சுஷில் குமார் ஷிண்டே, 2004ல் ஆந்திர கவர்னரானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மத்திய உள்துறை அமைச்சரானார்.
கடந்த, 2009ல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இந்தப் பட்டியலில் தமிழிசையும் இணைய உள்ளார். கவர்னராவதற்கு முன், தமிழக பா.ஜ., தலைவராக இருந்துள்ளார்.
-- நமது சிறப்பு நிருபர் -

