சமூக வலைதளங்களில் அரசு இ - மெயில் கூடாது: ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சமூக வலைதளங்களில் அரசு இ - மெயில் கூடாது: ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ADDED : நவ 02, 2024 11:53 PM

'தனிப்பட்ட சமூக வலைதளம் அல்லது சொந்த இணையதள பயன்பாடுகளுக்கு, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு அலுவல் தொடர்பான இ - மெயில் முகவரிகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புகார்
அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் இ - மெயில் முகவரிகளை அந்தந்த அரசுத்துறைகள் வழங்கியுள்ளன. அந்த இ - மெயில்கள் மூலமாகவே, அவர்களுக்கான அலுவல் ரீதியிலான தகவல் தொடர்புகள் நடக்கின்றன.
சமூக வலை தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும், அவர்களது இ - மெயில் முகவரியை வழங்கியாக வேண்டுமென்பது கட்டாயமாகி விட்டது.
இருவேறு இ - மெயில்களை தருவதில் உள்ள குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் காரணமாக, தங்களுக்கு அரசு வழங்கியுள்ள இ - மெயில் முகவரிகளையே, தங்களது தனிப்பட்ட சமூக வலைதளங்களுக்கு அரசு ஊழியர்களில் பலர் பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பல்வேறு சிக்கல்களும், சில சமயங்களில் தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படுவதாக அரசுக்கு புகார்கள் வருகின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு ஊழியராக இருக்கும் ஒருவர், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு இ - மெயில் முகவரிகளை சமூக வலைதள பயன்பாட்டுக்கு பதியவோ, பகிரவோ, பயன்படுத்துவதோ கூடாது என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:
அரசு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு துறையின் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அரசு இ - மெயில் முகவரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஆலோசகர்கள் என, அனைவரும் தங்களுடைய அலுவல் பூர்வமான பொது நிகழ்ச்சிகளுக்கு அரசு வழங்கியுள்ள இ - மெயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அந்த இ - மெயில்கள், 'நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர்' எனப்படும் மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வழங்கியுள்ள இ - மெயில் முகவரிகளாக இருக்க வேண்டும்.
இரண்டாவது முறை
அரசு ஊழியர்கள் எந்த துறையில் பணியாற்றுகின்றனரோ, அந்த துறையின் பெயருடன் கூடியதாக, அவர்களது இ - மெயில் முகவரிகள் இனிமேல் அமைந்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் கெஜட்டில் அறிவிப்பாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
அரசு இ - மெயில் பயன்பாடு குறித்த கொள்கை அறிவிப்பு, முதன்முறையாக, 2015 பிப்ரவரியில் வெளியானது.
இந்நிலையில், அந்த அறிவிப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு, இரண்டாவது முறையாக இந்த புதிய கொள்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நமது டில்லி நிருபர் -