சீன அணை அருணாச்சலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்: நிபுணர்கள் எச்சரிக்கை
சீன அணை அருணாச்சலுக்கு பேரழிவை ஏற்படுத்தும்: நிபுணர்கள் எச்சரிக்கை
UPDATED : ஜூலை 12, 2025 07:02 AM
ADDED : ஜூலை 12, 2025 02:02 AM

புதுடில்லி: திபெத்தின் பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டவுள்ள உலகின் மிகப்பெரிய அணையால் அருணாச்சல பிரதேசத்திற்கும், வங்கதேசத்திற்கும் பேரழிவு ஏற்படும் என நீரியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரம்மபுத்திரா
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பிரமாண்டமான அணையை சீனா கட்ட உள்ளது. இந்த அணையால், 'தாழ்வான பகுதிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது' என சீனா கூறி வருகிறது. ஆனால், 'இந்த அணை ஒரு நீர் வெடிகுண்டு' என, அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு சமீபத்தில் கூறினார். நீரியல் நிபுணர்களும் இதை ஆமோதிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: பிரம்மபுத்திரா நதி யார்லுங் சாங்போ ஆறாக திபெத்தில் துவங்கி, நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தில் சியாங் ஆறாகவும், அசாமில் பிரம்மபுத்திராவாகவும் மாறி, வங்கதேசம் வழியாக வங்காள விரிகுடாவை அடைகிறது.
நம் நாட்டு எல்லையிலிருந்து 50 கி.மீ., தொலைவில், திபெத்தில் உள்ள மெடோங் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் மீது இந்த மிகப்பெரும் அணை கட்டப்பட உள்ளது. இந்த அணை திட்டத்திற்காக, 12 லட்சம் கோடி ரூபாயை சீனா செலவிடுகிறது. இது, 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
வெள்ள பாதிப்பு
இதை தவிர, இந்த அணை பற்றிய அனைத்து தகவல்களையும் சீனா ரகசியமாக வைத்திருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அணையிலிருந்து திடீரென நீர் வெளியேற்றப்பட்டால், அருணாச்சலின் சியாங் பகுதி முழுதும் அழிவை சந்திக்கும்.
இங்கு, பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். சீனா சர்வதேச நீர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத நாடு என்பதால், பிரம்மபுத்திரா நதியின் நீர் ஓட்டத்தை தன்னிச்சையாக கட்டுப்படுத்த முடியும்.
இது, அருணாச்சல் மற்றும் கீழ்நிலைப் பகுதிகளில் நீர் பற்றாக்குறையை உருவாக்கலாம் அல்லது வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தலாம். அணை, இமயமலை பகுதியில் பூமியின் கண்ட தட்டின் எல்லையில் கட்டப்பட உள்ளது. இங்கு பூகம்ப அபாயம் உள்ளது. இது, அணையின் பாதுகாப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பேரழிவுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.