சுத்தமாகும் சென்னை! குப்பை அகற்றுவதில் மாநகராட்சி அக்கறை; துாய்மை பட்டியலில் முன்னேற நடவடிக்கை
சுத்தமாகும் சென்னை! குப்பை அகற்றுவதில் மாநகராட்சி அக்கறை; துாய்மை பட்டியலில் முன்னேற நடவடிக்கை
UPDATED : அக் 09, 2024 05:58 AM
ADDED : அக் 08, 2024 11:02 PM

நாட்டின் துாய்மை நகர பட்டியலில் 199 வது இடத்திற்கு பின்தங்கியுள்ள சென்னையை, 2025க்குள் குப்பையில்லா மாநகராக உருவாக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. மூன்று மாதங்களில், 34.31 லட்சம் கிலோ குப்பை, 1.45 கோடி கிலோ கட்டட கழிவு அகற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் துாய்மை நகரங்களை தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துாய்மை நகரங்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உடைய, 446 நகரங்கள் இவ்வாறு பட்டியலிடப்படுகின்றன.
இப்பட்டியலில், 2022ல் 44வது இடத்தில் இருந்த சென்னை, கடந்தாண்டு 199வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தினமும் 65 லட்சம் கிலோ குப்பை சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், 12 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. நீர்நிலைகள், பொது இடங்களில் குப்பையை வீசுவதால், துாய்மை நகர பட்டியலில் பின்தங்கியதுடன், குப்பை நிறைந்த நகரமாக சென்னை காட்சியளித்து வந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கமிஷனர் ஆக பொறுப்பேற்ற ஜெ. குமரகுருபரன் மாநகரில் ஆங்காங்கே நீண்ட காலமாக கொட்டப்பட்டு இருந்த குப்பையை அகற்றும் பணியில் அதிக கவனம் செலுத்த துவங்கினார்.
அதன்படி தொடர்ந்து 15 நாட்கள் இரவு நேரங்களில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் நீண்ட காலமாக குட்டப்பட்டிருந்த குப்பை, கட்டடக்கழிவு, பழுதடைந்த வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு ஜூலை 22 முதல் தற்போது வரை 34.31 லட்சம் கிலோ திடக்கழிவு, 1.45 கோடி கிலோ கட்டடக்கழிவு அகற்றப்பட்டு உள்ளது.
பொது இடங்கள் மற்றும் காலியிடங்களில் குப்பை கொட்டினாலும், எரித்து மாசு ஏற்படுத்தினாலும், விதிக்கப்பட்டு வந்த அபராதம், 500 ரூபாயிலிருந்து, 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அத்துடன் பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மண்டல வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் உதவி செயற்பொறியாளர், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு ரோந்து வாகனம் என 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்குழுவில் இடம் பெற்றவர்களுக்கும் மற்றும் வார்டு வாரியாக உள்ள உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கும், பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் வகையில் ஸ்வைப் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் வாயிலாக 2025 ஆம் ஆண்டில் தூய்மை நகர பட்டியலில் சென்னை மாநகரம் முன்னேற்றம் அடையும் என மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது : சென்னை மாநகரை தூய்மையாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் அதற்கான மாற்றம் தெரியவரும்.
தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதுடன் பொது, நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் மாசு ஏற்படுத்தும் வகையில் குப்பை கொட்டுதல் எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் உடனடி அபராதம் வசூலிக்கப்படும்.
இதற்காக மண்டலத்திற்கு ஒரு ரோந்து வாகனம் அபராத தொகை வசூலிக்கும் வகையில் 500 ஸ்வைப் இயந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.
குப்பைத்தொட்டிகள் வைக்கும் பணி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது எனவே சென்னையில் தூய்மையாக பராமரிக்கும் மாநகராட்சியின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

