முதல்வர் மருந்தகம் தேவையா: கூட்டுறவு சங்க பணியாளர்கள் எதிர்ப்பு
முதல்வர் மருந்தகம் தேவையா: கூட்டுறவு சங்க பணியாளர்கள் எதிர்ப்பு
ADDED : நவ 12, 2024 04:31 AM

சிவகங்கை,: கூட்டுறவுத்துறை நடத்திய அம்மா மருந்தகம் நஷ்டத்தை சந்தித்த நிலையில் மீண்டும் முதல்வர் மருந்தகம் திறக்க தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவுத்துறையின் கீழ் 4,350 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், 150 நகர கூட்டுறவு சங்கங்களின் கீழ் 20 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவுத்துறை மூலம் மாநில அளவில் 1,200 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து மருந்தகங்களை முறையாக செயல்படுத்தாததால் நலிவடைந்து, இன்றைக்கு 100 மருந்தகங்களாக குறைந்துள்ளன.
இச்சூழலில் கூட்டுறவுத்துறை மூலம் மாவட்டத்திற்கு பத்து முதல்வர் மருந்தகம் வீதம் மாநில அளவில் 380 மருந்தகங்கள் திறக்க வேண்டும். மாவட்டத்திற்கு 6 வீதம் மாநில அளவில் 228 உழவர் சந்தைகளை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் போராட்டம்
ஏற்கனவே தொடக்க கூட்டுறவு கடன் சங்க நிதியில் வேளாண் கருவிகளான டிராக்டர், இயந்திரம் போன்றவற்றை வாங்கி, அவற்றில் வருமானம் பார்க்க முடியாமல் சங்கங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இச்சூழலில் தொடர்ந்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை நஷ்டத்தில் தள்ளும்விதம் முதல்வர் மருந்தகம், உழவர் சந்தை போன்ற திட்டத்தை துவக்கி தொடர் நஷ்டத்தை வங்கிகள் சந்திக்கும் நிலை ஏற்படும். தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இது போன்ற திட்டங்களை கைவிடக்கோரி தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று அந்தந்த மாவட்ட இணை பதிவாளரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
வங்கிகள் நலிவடையும்
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் பி.காமராஜ் பாண்டியன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட உழவர் சந்தைகளை வேளாண்மை துறை செயல்படுத்த முடியாத நிலையுள்ளது. மருந்தகங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை ஒதுக்கீடு செய்யாமல் மக்கள் எதிர்பார்க்காத மருந்துகளை ஒதுக்கினால் விற்பனை பாதிக்கப்படும். இது போன்று கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக உழவர் சந்தை, முதல்வர் மருந்தகம் துவக்கும் திட்டத்தை கைவிடக்கோரி தான், மனு அளிக்கும் போராட்டம் நடத்தினோம் என்றார்.
