'சர்வே' முடிவு அடிப்படையில் கூட்டணி: பா.ம.க., - நா.த.க.,வுக்கு இ,பி,எஸ்., துாது
'சர்வே' முடிவு அடிப்படையில் கூட்டணி: பா.ம.க., - நா.த.க.,வுக்கு இ,பி,எஸ்., துாது
ADDED : பிப் 21, 2025 06:30 AM

கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், பலமான கூட்டணி அமைக்காத காரணத்தால், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது; ஏழு தொகுதிகளில் டிபாசிட்டை பறி கொடுத்ததுடன், 13 இடங்களில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
அடுத்த ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலில், அந்த தவறை செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், எவ்வளவு 'சீட்' கிடைக்கும் என்பதை அறிய, தனியார் அமைப்பு வாயிலாக 'சர்வே' நடத்தியுள்ளார்.
அந்த சர்வே அறிக்கையில், 'தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டால், 94 தொகுதிகளை கைப்பற்ற முடியும். த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால், கூடுதலாக 15 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், கூடுதலாக ஐந்து தான் தேறும். பா.ம.க.,வுடன் மட்டும் கூட்டணி வைத்தால், 114 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், 140 தொகுதிகளில் வெல்ல முடியும்' என, கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பா.ம.க.,வையும், நாம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் பழனிசாமியை, அவரது சேலம் இல்லத்தில், தன் குடும்ப திருமண விழாவுக்கு அழைக்க, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி சந்தித்தார். அப்போது, 45 தொகுதிகள் வரை கொடுப்பதாகவும், 2026ல் ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாகவும் பழனிசாமி கூறியுள்ளதாக தெரிகிறது.
அதேபோல், பா.ம.க.,வுக்கு அடுத்த நிலையில், நா.த.க.,வுக்கும் சீட் வழங்கப்படும் என, அக்கட்சித் தலைவர் சீமானுக்கும், பழனிசாமி தரப்பில் துாது விடப்பட்டுள்ளது. இரு கட்சிகளிடமிருந்து இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
அதனால், கூட்டணி அமைப்பதற்கு முன், கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தனக்கு விரோதமாகச் செயல்படும் நிர்வாகிகளை களையெடுக்கவும், 'சீக்ரெட் கமிட்டி' ஒன்றை பழனிசாமி அமைத்து உள்ளார்.
கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாகச் செயல்படும் நிர்வாகிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தினகரன், சசிகலா, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகச் செயல்படும் நிர்வாகிகள் மீதான புகார்களை விசாரிக்கவும், சீக்ரெட் கமிட்டிக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கமிட்டி தரும் அறிக்கையின் அடிப்படையில், டெல்டா மாவட்ட அமைப்பு செயலர்கள் சிலரை முதற்கட்டமாக களையெடுக்க, பழனிசாமி சமீபத்தில் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -