பழைய ஸ்கூட்டரை இ-வாகனமாக மாற்றி பிரமிக்க வைக்கும் கோவை பெண்!
பழைய ஸ்கூட்டரை இ-வாகனமாக மாற்றி பிரமிக்க வைக்கும் கோவை பெண்!
UPDATED : டிச 05, 2024 08:36 AM
ADDED : டிச 04, 2024 11:04 PM

கோவை: கோவையை சேர்ந்தவர் சிவசங்கரி, எம்.டெக்., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்தவர். படித்த படிப்பின் வாயிலாக புதிய மின்னணு தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதன் படி அன்றாடம் பயன்படுத்தும் இரு சக்கர பெட்ரோல் வாகனங்களை, அப்படியே மின்சார வாகனங்களாக மாற்றித்தருகிறார்.
இதற்கு புனேவிலுள்ள இந்திய அரசின் 'ஆட்டோமேட்டிவ் ரிசர்ச் அசோசியேசன் ஆப் இந்தியா' (ஏ.ஆர்.ஏ.ஐ.) மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையம் ( ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி- கிண்டி) இவ்விரண்டு இடத்திலும் அனுமதி பெற்றுத்தருகிறார்.
அதன் படி, ஏற்கனவே பெட்ரோலில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர்களுக்கு அவரது புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக, உருவாக்கப்பட்ட மின்னணு கிட்டை இணைத்து, அதற்கேற்ப உபகரணங்களையும் பேட்டரிகளையும் பொருத்துகிறார். இதற்கு ஒருவார காலமே அதிகபட்சம்.
இதற்கு வாகனத்தின் ஆர்.சி., இன்சூரன்ஸ், தகுதிச்சான்று ஆகியவை காலாவதியாகாமல் இருக்க வேண்டும். வாகனத்துக்கு சாலைப்போக்குவரத்து போலீசார் விதித்த அபராதம் செலுத்தாமல் இருக்ககூடாது. வாகனத்துடைய நிஜ உரிமையாளர் இருந்தால் மட்டுமே மின்னணு வாகனமாக மாற்றித்தருகிறார்.
இது குறித்து, இன்ஜினியர் சிவசங்கரி கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுவதுமாக கற்று தெரிந்து கொண்டேன். அதன் பின்பு மின்சாரம் மின்னணு தொழில்நுட்பத்தை முழுமையாக தெரிந்து கொண்டேன். புதியதாக மின்வாகனம் வாங்கவேண்டுமென்றால், அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் குறைந்த செலவில் நாம் பயன்படுத்தும் வாகனத்தையே மின்சார வாகனமாக மாற்ற திட்டமிட்டேன். படித்த படிப்பை வைத்து அதற்கேற்ப புதிய கிட்டை கண்டறிந்தேன். அதை நான் பயன்படுத்தும் வாகனத்தில் பொருத்தினேன்; சிறப்பாக இயங்கியது.
அதன் பின் எனது உறவினர்கள், நண்பர்கள் என்று ஓரிரண்டு வாகனங்களுக்கு பொருத்திப் பார்த்தேன். ஏராளமானோர் கேட்டனர். அதற்காகவே ஒரு தொழிற்சாலையையே கோவையில் உருவாக்கி விட்டேன்.
தற்போது எத்தனை வாகனங்களை கொடுத்தாலும், ஒரே வாரத்தில் மாற்றிக்கொடுப்பேன். அதற்கு என்னைப்போன்ற இளம் மகளிர் தொழில்நுட்ப வல்லுனர்கள் என்னுடன் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அவரது தொழிற்சாலையை, 91501 77211, 72008 75111 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.