நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மீண்டும் கலெக்டர்கள் கையில் அதிகாரம்
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மீண்டும் கலெக்டர்கள் கையில் அதிகாரம்
ADDED : செப் 18, 2026 05:12 AM

சென்னை: 'நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவு திறந்து, நெல் கொள்முதல் செய்ய, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் போதிய அளவு திறக்கப்படாதது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.
குறைவு
இது தொடர்பாக, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அளித்து உள்ள விளக்கம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு, 4,329 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 6 லட்சத்து 22 ஆயிரத்து 487 விவசாயிகளிடம் இருந்து, 65 லட்சத்து 16 ஆயிரத்து 373 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பாண்டில், இம்மாதம் 1ம் தேதி முதல், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 487 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 68 ஆயிரத்து 795 டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே தேதியில், 870 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 1 லட்சத்து 69 ஆயிரத்து 190 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், நடப்பு கொள்முதல் பருவத்தில், நெல் சாகுபடி பரப்பு, கடந்த கொள்முதல் பருவத்தை விட குறைந்ததே, தற்போதைய குறைவுக்கு முக்கிய காரணம்.

நடவடிக்கை
மாவட்டங்களில் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, நெல் கொள்முதல் செய்திட, கலெக்டர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், மண்டல அலுவலகம் வழியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு எவ்வித இடையூறுமின்றி நெல் கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்த நெல்லை, உரிய காலத்தில் நகர்த்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
