செல்வப்பெருந்தகை படத்துடன் காங்., கொடி; புதிய கட்சியை உருவாக்க ஒத்திகையா?
செல்வப்பெருந்தகை படத்துடன் காங்., கொடி; புதிய கட்சியை உருவாக்க ஒத்திகையா?
UPDATED : மார் 02, 2026 05:25 AM
ADDED : மார் 02, 2026 05:16 AM

- நமது நிருபர் -
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உருவப் படத்துடன் கூடிய காங்கிரஸ் கொடி கட்டப்பட்டதால், சர்ச்சை எழுந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, கொடிகள் அகற்றப்பட்டன.
தி.மு.க., கூட்டணியில் காங்., நீடிக்க வேண்டும் என, செல்வப்பெருந்தகை தலைமையிலான சில நிர்வாகிகள் விரும்புகின்றனர். அதேபோல் ஆட்சியில் பங்கு பெற, நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சிக்குள் வேறு சில நிர்வாகிகள் விரும்புகின்றனர். இதனால், தி.மு.க., கூட்டணியில் காங்., நீடித்தாலும் சரி, த.வெ.க., கூட்டணிக்கு சென்றாலும் சரி, தமிழக காங்கிரசில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் விஜய் வீடு அருகே நடந்த நிகழ்ச்சிக்காக, செல்வப்பெருந்தகையை வரவேற்று பேனர், காங்., கொடிகள் கட்டப்பட்டிருந்தன; காங்கிரஸ் கொடியில் செல்வப்பெருந்தகை படம் இடம் பெற்றிருந்தது.
காங்., வரலாற்றில், கட்சி கொடியில் யார் படமும் இடம் பெற்றதில்லை. ஆனால், செல்வப்பெருந்தகை படம் இடம் பெற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. புதிய கட்சியை உருவாக்க ஒத்திகை பார்க்கப்படுகிறதா அல்லது காங்., பிளவுபட முன்னோட்டமா என, கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
செல்வப்பெருந்தகை படத்துடன் காங்., கொடி வைக்கப்பட்டதை அறிந்து, கட்சியின் மாநில நிர்வாகிகள் மயிலை அசோக்குமார், ஸ்டீபன், மாவட்டத் தலைவர் விஜயசேகர், மயிலாப்பூர் பகுதி தலைவர் ஆதிநாராயணன் போன்றோர் சென்று, கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சித்தனர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களை சமரசப்படுத்தினர். பின், அங்கிருந்த அனைத்து கொடிகளும் அகற்றப்பட்டன.
இதற்கிடையே, செல்வப் பெருந்தகை படத்துடன் கொடிகளை வைத்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி மேலிடத் திற்கு புகார் அனுப்ப உள்ளதாக காங்கிரசார் தெரிவித்தனர்.

