அதிகாரிகள் தற்கொலைகளால் விழி பிதுங்கும் காங்கிரஸ் அரசு
அதிகாரிகள் தற்கொலைகளால் விழி பிதுங்கும் காங்கிரஸ் அரசு
ADDED : டிச 31, 2024 11:36 PM

கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, அதிகாரிகளின் தற்கொலைகளே பெரும் தலைவலியாக உள்ளது. ஏற்கனவே ஒருவர், அமைச்சர் பதவியை இழந்தார். தற்போது சில அமைச்சர்களின் பதவிகளுக்கு, அதிகாரிகளின் தற்கொலையால் ஆபத்து வந்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. இந்த அரசுக்கு அதிகாரிகளின் தற்கொலைகளே பெரும் தலைவலியாக வாட்டுகிறது. இதையே எதிர்க்கட்சியினர் அஸ்திரமாக பயன்படுத்தி, அரசுக்கு குடைச்சல் கொடுக்கின்றனர்.
பரபரப்பு கடிதம்
நடப்பாண்டு மே மாதம், வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடக்கும் முறைகேட்டை விவரித்திருந்தார். ஆணையத்துக்கு சொந்தமான பணத்தை, சட்டவிரோதமாக வேறு கணக்குக்கு பரிமாற்றம் செய்யும்படி, தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பொறுப்பேற்று பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சி பா.ஜ., போராட்டம் நடத்தியது. முதலில் ராஜினாமா செய்ய மாட்டேன் என, நாகேந்திரா அடம் பிடித்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் நெருக்கடி கொடுத்ததால், வேறு வழியின்றி, பதவியை ராஜினாமா செய்தார். வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணம், பல்லாரி லோக்சபா தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தியதும், வெளிச்சத்துக்கு வந்து, காங்., அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.
அதிகாரியின் தற்கொலைக்கு பின்னரே, ஆணையத்தில் நடந்த ஊழல் வெளி உலகுக்கு தெரிந்தது. ஊழல் பணத்தை செலவிட்டு பல்லாரி தொகுதியில் ஜெயித்த காங்., - எம்.பி., துக்காராம், ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் நெருக்கடி கொடுக்கின்றனர்.
அழுத்தம்
நவம்பரில், பெலகாவி தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய ருத்ரண்ணா 35, அலுவலக அறையிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் இறப்புக்கு உயர் அதிகாரிகளின் அழுத்தமே காரணம் என, விவரித்திருந்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதி வைத்த கடிதத்தில், 'தாசில்தார் பசவராஜ் நாகராளா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணை நடக்கிறது. விசாரணையை திசை மாற்ற, அலுவலக ஊழியர்கள் முயற்சிக்கின்றனர்.
'தாசில்தாருக்கு எதிராக எதுவும் கூறக்கூடாது என, மிரட்டுகின்றனர். என் தற்கொலைக்கு தாசில்தார் பசவராஜ் நாகராளா உட்பட, ஐந்து பேரின் நெருக்கடியே காரணம்' என விவரித்ததாக தகவல் வெளியானது. தாசில்தார் பசவராஜ் நாகராளா அலுவலகத்தின் சிலர், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் தீவிர ஆதரவாளர்கள். எனவே தாசில்தாரை காப்பாற்ற அமைச்சர் முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இவர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
தர்ம சங்கடம்
இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், பீதரில் ஒப்பந்ததாரர் சச்சின் 26, ரயிலில் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். கிராம வளர்ச்சி துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு நெருக்கமான, கலபுரகி காங்கிரஸ் பிரமுகர் ராஜு கவனுரா உட்பட எட்டு பேர் ஒப்பந்தம் அளிக்கும் விஷயத்தில் என்னிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, கடிதம் எழுதி வைத்திருந்தார். இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று பிரியங்க் கார்கே, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை வழக்கை, சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்காவிட்டால், ஜனவரி 4ம் தேதி போராட்டம் நடத்துவதாக, பா.ஜ., எச்சரித்துள்ளது. பிரியங்க் கார்கேவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, நெருக்கடி கொடுக்கின்றனர். அதிகாரிகள், ஒப்பந்ததாரர் தற்கொலையே, அமைச்சர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. முந்தைய பா.ஜ., அரசில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -