40 'சீட்' கேட்டு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டம்
40 'சீட்' கேட்டு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டம்
ADDED : நவ 07, 2024 12:24 AM

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 40 தொகுதிகளை பெற, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் கிராம காங்கிரஸ் சீரமைப்பு பணிகளையும், கிராம தரிசனம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்த, தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலில், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் வென்றது.
ஒரு லோக்சபா தொகுதிக்கு, ஆறு சட்டசபை தொகுதிகள் என்ற அடிப்படையில், ஒன்பது லோக்சபா தொகுதிகளுக்கு, 54 சட்டசபை தொகுதிகளை பெற வேண்டும் என்ற கோரிக்கை, காங்கிரசில் எழுந்துள்ளது.
ஆனால், கட்சி கட்டமைப்பு பலமாக இல்லாததால், 54 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால், 40 தொகுதிகளாவது பெற வேண்டும் என, காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகின்றனர்.
அதற்காக கட்சியை பலப்படுத்தும் வகையில், கிராம காங்கிரஸ் சீரமைப்பு, கிராம தரிசனம் திட்டங்களை செயல்படுத்த, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
த.வெ.க., தலைவர் விஜய் தன் கட்சியின் மாநாட்டில், 'எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம்' என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், டில்லி மேலிடம், தி.மு.க., கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறது.
இதனால், தி.மு.க., விடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில், தமிழக காங்கிரசார் உறுதியாக உள்ளனர்.
தி.மு.க., தலைமை, 200 தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது. மீதமுள்ள 34ல் காங்கிரசுக்கு, 15 தொகுதிகளை ஒதுக்க திட்டமிடுகிறது. இந்த நேரத்தில், விஜய் வருகையும், ஆட்சியில் பங்கு அறிவிப்பும் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என, செல்வப்பெருந்தகை விரும்புகிறார். எனவே தான், கிராம காங்கிரஸ் சீரமைப்பு என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
தமிழகம் முழுதும் கிராம காங்கிரசை சீர்படுத்த, மேலிட பொறுப்பாளர் சூரஜ் ஹெக்டேவுடன் சேர்ந்து சுற்றுப்பயணத்தை நேற்று துவக்கியுள்ளார். டிச., 5ம் தேதி பயணத்தை முடிக்கிறார்.
பின், கிராம தரிசனம் என்ற பெயரில், கிராமங்களில் தங்கி மக்களை சந்திக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு மாதம் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், ஜன., மாதத்தில் கிராம கமிட்டி, பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.
இப்படி வரிசையாக பல்வேறு நிகழ்ச்சிகளை, கிராமங்களை நோக்கி நடத்துவதன் வாயிலாக கட்சி கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என, செல்வப்பெருந்தகை உறுதியாக நம்புகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-