பேச்சு நடத்த அழைக்க வேண்டும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் அழுத்தம்
பேச்சு நடத்த அழைக்க வேண்டும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் அழுத்தம்
ADDED : ஜன 28, 2026 08:19 AM

-நமது நிருபர்-
'தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சை துவக்க காங்., குழுவை உடனே அழைக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறியுள்ளார்.
டில்லியில் அவர் அளித்த பேட்டி: கடந்த டிச.3ல், தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை, தேர்தலுக்காக தமிழக காங்கிரசில் நியமிக்கப்பட்டிருக்கும் ஐவர் குழுவினர் சந்தித்தோம். அப்போது, கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தோம். பின், தொகுதி பங்கீட்டை உடனே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம்.
தி.மு.க., சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த விரைவில் குழு அமைக்கப்படும்; குழு அமைந்ததும், காங்கிரசின் ஐவர் குழுவை அழைத்து பேச்சு நடத்துவோம்' என ஸ்டாலின் கூறினார். முதல்வர் ஸ்டாலின் குழு அமைப்பதாகக் கூறி, இரு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், குழு அமைக்கப்படவில்லை. இந்நிலையில், எதிர் தரப்பில் கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக களம் இறங்கி விட்டனர்.
தேர்தலுக்கான நாட்கள் நெருங்கும் சூழலில், எங்களை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த, தி.மு.க., தரப்பில் அழைக்காமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், தொகுதி பங்கீடு குறித்து காங்., குழுவை ஸ்டாலின் உடனே அழைக்க வேண்டும். இவ்வாறு கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.

