கட்டுமான திட்ட அனுமதி கட்டணம்; ஊராட்சி பகுதிகளில் மறைமுக உயர்வு
கட்டுமான திட்ட அனுமதி கட்டணம்; ஊராட்சி பகுதிகளில் மறைமுக உயர்வு
ADDED : டிச 17, 2024 03:24 AM

சென்னை : ஊராட்சி பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை, ஒரே தலைப்பில் செலுத்துவதற்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டதாக கூறி, மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் வழங்கலாம். இதில், 2,500 சதுர அடி வரையிலான மனைகளில், 3,500 சதுர அடி வரையிலான வீடுகள் கட்டுவதற்கு, சுயசான்று முறையில் அனுமதி வழங்குவது ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிர்ப்பு
இதற்கு மக்கள் எளிதாக செலுத்துவதற்காக, ஒற்றை தலைப்பில் கட்டணங்கள் தொகுக்கப்பட்டு, புதிய விகிதங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஊராட்சிகள் அமைவிட அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு, சதுர அடிக்கு, 15 முதல், 27 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
சுயசான்று முறை, கட்டட அனுமதிக்கு மட்டும் தான் என்று அறிவிக்கப்பட்டாலும், பிற வகை கட்டட அனுமதிக்கும் இந்த கட்டணங்களை பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்க துவங்கியுள்ளன. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ள அரசாணை:
சுயசான்று முறை கட்டட அனுமதிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை, அதற்கு மேற்பட்ட பரப்பளவு கட்டட அனுமதிக்கும் வசூலிக்கலாம். ஒற்றை தலைப்பில் இந்த கட்டணங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, சென்னை பெருநகர் பகுதி எல்லையில் நகர்ப்புற தன்மையில் இருக்கும், 78 ஊராட்சிகள் 'ஏ' என்றும், பிற நகரங்களை ஒட்டி இருக்கும், 612 ஊராட்சிகள் 'பி' என்றும், ஊரக தன்மையில் இருக்கும், 44 ஊராட்சிகள் 'சி' என்றும், பிற பகுதிகளில் உள்ள, 11,791 ஊராட்சிகள் 'டி' என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில், 'ஏ' ஊராட்சிகளில், 3,500 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு, 27 ரூபாய், வணிக கட்டடங்களுக்கு சதுர அடிக்கு, 32 ரூபாய், நிறுவன கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு, 43 ரூபாய் வசூலிக்கப்படும்.
'பி' வகை ஊராட்சிகளில், 3,500 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு சதுர அடிக்கு, 25 ரூபாய், வணிக கட்டடங்களுக்கு 30 ரூபாய், நிறுவன கட்டடங்களுக்கு, 40 ரூபாய் வசூலிக்கப்படும்.
ஒப்புதல் கட்டணம்
'சி' வகை ஊராட்சிகளில், 3,500 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு, 22 ரூபாய், வணிக கட்டடங்களுக்கு 26 ரூபாய், நிறுவன கட்டடங்களுக்கு 35 ரூபாய் வசூலிக்கப்படும்.
'டி' வகை ஊராட்சிகளில், 3,500 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு, சதுர அடிக்கு, 15 ரூபாய், வணிக கட்டடங்களுக்கு 18 ரூபாய், நிறுவன கட்டடங்களுக்கு 24 ரூபாய் வசூலிக்கப்படும்.
மனைப்பிரிவு திட்டங்களில் குடியிருப்பு மனைக்கு தலா, 1,000 ரூபாய், தொழில் மனைக்கு தலா, 10,000 ரூபாய் வீதம் ஒப்புதல் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டுமான தொழிலாளர் நலநிதி, சொத்து வரி உள்ளிட்ட ஊராட்சிகள் வசூலிக்கும் பிற கட்டணங்கள் இதில் சேராது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:
சுயசான்று முறை திட்டத்தில் கட்டட அனுமதிக்கு, அதிகபட்சமாக, சதுர அடிக்கு, 27 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டாலும், இதர கட்டணங்கள் சேர்த்து, 45 ரூபாய் செலவாகிறது. ஒரே தலைப்பில் சீரமைக்கிறோம் என்று மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.