மாமல்லையில் தி.மு.க., அரங்கம்; கட்டுமான பணி விரைவில் துவக்கம்
மாமல்லையில் தி.மு.க., அரங்கம்; கட்டுமான பணி விரைவில் துவக்கம்
ADDED : அக் 15, 2024 04:31 AM

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில், மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய தனியார் நிலங்களை, சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., பிரமுகர் ஒருவர் வாங்கினார். இந்த நிலங்களுக்கும், புதுச்சேரி சாலைக்கும் இடையே, அரசு தரிசு நன்செய் நிலமும் உள்ளது.
தி.மு.க., பிரமுகர் வாங்கிய நிலத்தை, புதுச்சேரி சாலையுடன் இணைக்க விரும்பி, அரசு தரிசு நன்செய் நிலத்தை பாதைக்காக ஆக்கிரமிக்க முயன்ற போது, அதை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பத்திரப்பதிவு
இந்நிலையில், பெருமாளேரி பகுதியில், தி.மு.க., பிரமுகர் வாங்கிய நிலம், தி.மு.க., அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட்டது. இதற்கான பத்திரப்பதிவை, 2019 பிப்ரவரியில், தி.மு.க., தலைவரான ஸ்டாலின், திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொண்டார்.
உடன், அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு, 'தி.மு.க., அறக்கட்டளை' என, பெயர் பலகையும் வைக்கப்பட்டது.
தி.மு.க., அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட்ட நிலப்பகுதி, புதுச்சேரி சாலை மட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக இருந்தது. அதனால், சாலை மட்டத்திற்கு உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, 2022ல், ஏரி கிராவல் மண் குவித்து, நிலமட்டம் உயர்த்தப்பட்டு சமன் செய்யப்பட்டது.
தகர கொட்டகை
இந்நிலையில், கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்படலாம் என்று தெரிகிறது. அதற்கேற்ற வகையில், அங்கு தொழிலாளர்கள் தங்குவதற்கான தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் இந்த நிலத்தில், 'கன்வென்ஷன் சென்டர்' எனப்படும், மாநாட்டு அரங்கம் அமைக்க, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட நகர் ஊரமைப்பு துறையிடம், கடந்த ஆண்டு ஜூலையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார்.
மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழும கூட்டத்தில், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கன்வென்ஷன் சென்டரை, நிலத்தடி, தரை, முதல் என, இரு தளங்களுடனும், மொத்தம் 25,000 ச.மீ., பரப்புக்கு மேல் அமைக்க, கடந்த ஜனவரியில், நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெறப்பட்டுஉள்ளதாக தெரிகிறது.
- நமது நிருபர் -

