தொடர் போராட்டம் - ஆர்ப்பாட்டம்: ஜெ., பாணியில் செயல்பட இ.பி.எஸ்., திட்டம்
தொடர் போராட்டம் - ஆர்ப்பாட்டம்: ஜெ., பாணியில் செயல்பட இ.பி.எஸ்., திட்டம்
ADDED : நவ 08, 2024 05:13 AM

மதுரை : “இப்போதே கட்சியை வலுப்படுத்தினால்தான் சட்டசபை தேர்தலின்போது கூட்டணி அமைக்க பிற கட்சிகள் தானாக தேடி வரும். அதற்கு தகுந்தாற்போல் பணியாற்ற வேண்டும்,” என மாவட்ட செயலர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., அறிவுறுத்தினார்.
அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
சுற்றுப்பயணம்
'கூட்டணி குறித்தோ, விஜய் கட்சி குறித்தோ எதுவும் பேச வேண்டாம்' என கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே அறிவுறுத்தப்பட்டது. 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய, பூத் கமிட்டி அளவில் நிர்வாகிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இ.பி.எஸ்., பேசுகையில், ''கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். கட்சி வலுவாக இருந்தால் கூட்டணி தானாக அமையும். அதற்கேற்ப இப்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
''தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவாகும் என்பதால், தி.மு.க.,வை தவிர்த்து பிற கட்சிகள் குறித்து தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
''தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை, போராட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நானும் சுற்றுப்பயணம் வருகிறேன்,” என்றார்.
கூட்டத்திற்கு பின், மக்கள் பிரச்னையை கையில் எடுக்க முடிவு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சி சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
மதுரை மேற்கு மாவட்ட செயலர் உதயகுமார், கிழக்கு மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா ஆகியோரிடம் ஆலோசித்து, மதுரையில் நவ., 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பழனிசாமி அறிவித்தார். மாநகராட்சி பகுதி, நகர் செயலர் செல்லுார் ராஜு எல்லைக்குள் வருகிறது. ஆனால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஜெ., ஸ்டைல்
அவர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு குடும்பத்துடன் இலங்கை கதிர்காமம் முருகன் கோவிலுக்குச் சென்றதால் பங்கேற்கவில்லை. அதுகுறித்து, பழனிசாமிக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2010ல் தி.மு.க., ஆட்சியின் போது, சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பிருந்து ஜெயலலிதா உத்தரவின்படிபடி, மாதம் இருமுறை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை அ.தி.மு.க., ஈர்த்தது. அதே ஸ்டைலை தற்போது பழனிசாமியும் கையில் எடுத்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

