காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா தேசிய தலைவர் படம் போடாததால் சர்ச்சை
காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா தேசிய தலைவர் படம் போடாததால் சர்ச்சை
UPDATED : ஜூலை 15, 2025 10:34 AM
ADDED : ஜூலை 15, 2025 02:05 AM

தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று, கிராம கமிட்டி உறுப்பினர், அடையாள அட்டைகளை வழங்கினார்.
செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் நடத்திய விழாவிற்கு, தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமாரை அழைக்கவில்லை. இதனால், அவர் அதிருப்தி அடைந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில், விருதுநகர் லோக்சபா தொகுதி விழாக்குழு சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா விருதுநகரில் இன்று நடக்க உள்ளது.
இந்த விழாவில், விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு, காமராஜர் விருது வழங்க உள்ளார்.
விழாவிற்கான அழைப்பிதழில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெயர், புகைப்படம் இடம் பெறவில்லை.
இது, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காங்., பிற்படுத்தப்பட்டோர் அணியின் துணை தலைவர் ரவிராஜ் கூறுகையில், “மாணிக்கம் தாகூர், சுயேச்சையாக போட்டியிட்டால் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற முடியுமா? கட்சியின் அகில இந்திய தலைவர், மாநில தலைவர் புகைப்படத்தை புறக்கணித்தது கண்டனத்துக்குரியது,” என்றார்.
- நமது நிருபர் -

