வரதட்சணை வழக்குகளை விசாரிக்க 10 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது கோர்ட்
வரதட்சணை வழக்குகளை விசாரிக்க 10 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது கோர்ட்
UPDATED : ஆக 28, 2026 05:44 AM
ADDED : ஆக 28, 2026 05:23 AM

- சிறப்பு நிருபர் -
நாடு முழுதும் வரதட்சணை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க 10 முக்கிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க 10 வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* வரதட்சணை கேட்டு நடக்கும் கொலை, சித்ரவதைகள் தொடர்பான வழக்குகளுக்கு விசாரணை நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்.
* குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு, விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நீதித்துறை கண்காணிக்க வேண்டும்.
* குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 60 - 90 நாட்களுக்குள் நீதிமன்றங்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். தினசரி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளி அடிப்படையில் சாட்சியங்களிடம் விசாரிக்க வேண்டும்.
* காரணமின்றி வழக்கை ஒத்திவைக்க கூடாது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தால், மாற்று வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்.
* குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதும் முக்கிய சாட்சிகளை விசாரிக்க கால அட்டவணையை நீதிமன்றம் தயாரிக்க வேண்டும். சாட்சிகளுக்கு அழைப்பாணை சரியாக செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* உயர் நீதிமன்றங்கள் டிஜிட்டல் மேலாண்மை அமைப்புகளைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வரதட்சணை வழக்குகளை கண்காணிக்க வேண்டும்.
* விசாரணைக்கு தடை பெறப்பட்ட வரதட்சணை தொடர்பான பழைய மேல்முறையீடு மற்றும் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது மறுஆய்வு செய்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
* நீ திபதிகள், போலீஸ் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த அரசு வழக்கறிஞர்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்ட மகளிருக்கான உதவி மையங்கள், குடும்ப ஆலோசனை மையங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை மாநில அரசுகள் வலுப்படுத்த வேண்டும்.
* நிலுவை வழக்குகளை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
