ADDED : பிப் 02, 2026 06:18 AM

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் குமுறல்:
திருப்பூரில் சிறு தொழில் செய்கிறேன். தொழில் அபிவிருத்திக்காக கேட்டால் நியாயமான வட்டியில் கடன் உதவியும் வழங்கி வருகிறேன். என்னுடன் நெருங்கிப் பழகிய குடும்பத்தினர், அவர்களது தொழில் அபிவிருத்திக்காக லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்றனர். அதற்கு ஈடாக காசோலை வழங்கி உத்தரவாதம் அளித்தனர்.
ஆனால் கடன்தொகையினை திருப்பித்தரவில்லை. தற்போதும் வசதியாகவே வாழ்கின்றனர்; தொழில் செய்கின்றனர். பேச்சு நடத்தியும் பலனில்லாமல் போனதால் கோர்ட்டில் முறையிட்டேன். எனக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. மோசடியாளரின் சொத்துக்களை, வழக்கில் இணைக்க கோர்ட் உத்தரவிட்டது. உத்தரவு நகல் வழங்க கோர்ட் ஊழியருக்கு 500 ரூபாய் தண்டம் அழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனது வக்கீலிடம் முறையிட்டேன். 'இதுபற்றியெல்லாம் பேசினால் என் தொழில் பாதிக்கும்' எனக்கூறினார். அதன்பின் எதிர் தரப்பினரின் சொத்துக்களுக்கான 'அட்டாச்மென்ட்' செய்வதற்கான உத்தரவை நேரில் விநியோகிக்க வேண்டுமென்று கோர்ட் ஊழியர் தெரிவித்தார் அவருடன் நானும் பயணித்தேன். ஆர்டர் சர்வ் செய்வதற்கான செலவு எனக்கூறி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
'கையில் 500 தான் உள்ளது' என்று கூறி கொடுத்தேன். வாங்கமறுத்த அவர் 'எந்த காலத்தில் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்?' என கடிந்து கொண்டவாறே வாங்க மறுத்தார். அதன்பிறகு குறிப்பிட்ட தொகையை விடாப்பிடியாக கேட்டு பறித்து கொண்டார். பிறதுறைகளில் குறை என்றால் கோர்ட்டில் முறையிடலாம். கோர்ட்டிலேயே குறை என்றால் எங்கே போய் முறையிடுவது?
தொடரும்..
![]() |


