பெரியார் பல்கலை துணைவேந்தர் கவர்னருக்கு ஆதரவால் நெருக்கடி? பழைய புகார்களை துாசி தட்டும் விஜிலென்ஸ்
பெரியார் பல்கலை துணைவேந்தர் கவர்னருக்கு ஆதரவால் நெருக்கடி? பழைய புகார்களை துாசி தட்டும் விஜிலென்ஸ்
ADDED : ஏப் 29, 2025 04:54 AM

சேலம்,: பெரியார் பல்கலையில், பட்டியலினத்தவருக்கு ஒதுக்க வேண்டிய பணியிடங்களை, பொது பிரிவினருக்கு வழங்கிய புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று பல்கலை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
கவர்னருக்கு ஆதரவாக இருப்பதால், பெரியார் பல்கலை., துணைவேந்தருக்கு எதிராக பழைய புகார்களை துாசி தட்டி எடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிய போது, கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்டார்.
தமிழக அரசின், பல்வேறு உத்தரவுகளுக்கு கீழ்படியாமல், தன்னிச்சையாக செயல்பட்டார். இந்நிலையில், அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்காலம் நீட்டித்து கவர்னர் உத்தரவிட்டார்.
சமீபத்தில், ஊட்டியில் நடந்த துணைவேந்தர் மாநாட்டில், அவர் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, பூட்டர் பவுண்டேஷன் துவங்கிய வழக்கில், தொடர்ந்து இரண்டு நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பெரியார் பல்கலையில், 2022ல், நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
பட்டியலினத்தவருக்கு ஒதுக்க வேண்டிய இடங்களில், பணம் பெற்றுக் கொண்டு, பொது பிரிவினருக்கு பணி வழங்கப்பட்டதாக, அப்போது புகார் எழுந்தது.
மூன்றாண்டுகளுக்கு பின், தற்போது இப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.
நேற்று பெரியார் பல்கலை நுாலகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் உடல்கல்வி இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோரை, சேலம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து பலரிடமும், இப்புகார் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. துணைவேந்தரை பழிவாங்கும் நோக்கில், போலீசார் பழைய புகார்களை துாசி தட்டி வருவதாக, பல்கலை பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

