தி.மு.க., ஏரியாவிலும் திரண்டது கூட்டம்; மாயவரம், சீர்காழியில் பழனிசாமி உற்சாகம்
தி.மு.க., ஏரியாவிலும் திரண்டது கூட்டம்; மாயவரம், சீர்காழியில் பழனிசாமி உற்சாகம்
ADDED : ஜூலை 19, 2025 03:40 AM

சென்னை: தி.மு.க., பலமாக உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறையில், தன் பிரசார பயணத்திற்கு திரண்ட கூட்டத்தால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உற்சாகமடைந்து உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்தோடு, கடந்த 7ம் தேதி முதல், சட்டசபை தொகுதி வாரியாக பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு 100 சதவீத வெற்றியை தந்த கோவை மாவட்டத்திலிருந்து, தன் பயணத்தை பழனிசாமி துவங்கினார். மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் பெரும் கூட்டம் திரண்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில், தி.மு.க., பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வேதாரண்யம், நன்னிலம், ஒரத்தநாடு ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க., வென்றது.
ஆனாலும், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய சட்டசபை தொகுதிகளில், தற்போது பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு கூட்டம் திரண்டது. இதனால், உற்சாகமடைந்த பழனிசாமி, இந்த இடங்களில் தி.மு.க., அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'காவிரி டெல்டா மாவட்டங்களில் எப்போதுமே தி.மு.க., அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அது மட்டுமல்லாது, இந்த மாவட்டங்களில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர்.
'இப்பகுதியிலேயே பழனிசாமியின் பிரசார பயணத்திற்கு, கோவைக்கு இணையாக கூட்டம் திரண்டுள்ளது. இது, தி.மு.க., அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது'என்றனர்.
மயிலாடுதுறையில் திரண்ட கூட்டத்தால் உற்சாகமடைந்த பழனிசாமி, அம்மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளை பாராட்டிஉள்ளார். மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.