சீரழிக்கப்படும் கோவில்கள் ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
சீரழிக்கப்படும் கோவில்கள் ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : பிப் 11, 2024 02:33 AM

திருப்பூர்;''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் பல கோவில்களின் பாதுகாப்பு நிலைமை படுமோசமாக இருக்கிறது,'' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கடந்த இரு நாட்கள் முன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோவிலில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தும், வேலை செய்யவில்லை. போலீஸ் விசாரித்த பின்தான், இது தெரியவந்தது.
தொன்மை வாய்ந்த இக்கோவிலில் காவலாளி கூட நியமிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதே கோவிலில் ஒருவாரம் முன், இரு வாலிபர்கள் ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். அதுவும், அறநிலையத்துறை அலுவலகம் முன்பே நடந்தது. பக்தர்களின் எதிர்ப்பு வந்த பின், நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. புகாரும் அளிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், இதே கோவிலில் இஸ்லாமியர் உள்ளே சென்று மொபைல் போனில் வீடியோ எடுத்ததும் சர்ச்சையாகியது.
கோவிலை காக்க குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், பக்தர்களோடு கோவில் மண்டபத்தில் அமர்ந்து பேசக்கூடாது என்று கோவில் நிர்வாகம் தடை செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் தேவையில்லாத உத்தரவுகளை பிறப்பித்து, பாரம்பரியமான விஷயங்களை தடை செய்கிறது; பக்தர்களை வேதனைப்படுத்தும் செயலில் இந்த அரசு செயல்படுகிறது. தமிழகத்தில், கடந்த, மூன்று ஆண்டாக கடவுள் நம்பிக்கை இல்லாத தி.மு.க., ஆட்சியால், கோவில்கள் சீரழிக்கப்படுகின்றன. பக்தர்கள் பயமுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

