UPDATED : ஜூன் 30, 2024 08:48 AM
ADDED : ஜூன் 30, 2024 05:05 AM

பெங்களூரு: பா.ஜ.,வை தோற்கடித்து, பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தாலும், காங்கிரசுக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள். 'வெற்றிக்கு காரணமான எனக்கு முதல்வர் பதவி வேண்டும்' என, டி.கே.சிவகுமார் கொடி பிடிக்க, சித்தராமையாவை முதல்வராக்கியது காங்., தலைமை.
'இப்போதைக்கு நீங்கள் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்; ஓரிரு ஆண்டுகளுக்கு பின், சுழற்சி முறையில் நீங்கள் தான் முதல்வர்' என, சிவகுமாரை அப்போது சமாதானப்படுத்தியது, காங்., மேலிடம்; ஆனாலும், பிரச்னை தீர்ந்த பாடாக இல்லை.
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின், 28 தொகுதிகளில், ஒன்பதில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அத்துடன், சிவகுமாரின் சகோதரர் சுரேஷ், பெங்களூரில் போட்டியிட்டு, பா.ஜ.,விடம் தோற்றார். இதையடுத்து சிவகுமார் - -சித்தராமையா கோஷ்டி சண்டை உச்சத்தை எட்டியுள்ளது. இதை, மேலும் தீவிரமாக்கும் விதமாக, ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
'தண்ணீராக பணத்தை செலவு செய்து, காங்கிரசுக்கு வெற்றியைக் கொடுத்தவர் சிவகுமார். எனவே, அவர் முதல்வராக வேண்டும்; சித்தராமையா தன் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுக்க வேண்டும்' என, ஒக்கலிக மட தலைவர் கூட்டமொன்றில் பேசியுள்ளார். அதுவும், மேடையில் முதல்வர் சித்தராமையா முன்னிலையில் இதைச் சொல்லியிருக்கிறார்; இதனால் கோஷ்டி தகராறு மோசமடைந்துள்ளது.
இதையடுத்து, சித்தராமையா கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர்கள் சமீர் அகமது கான், சதீஷ் ஜார்கிஹோளி, கே.என்.ராமண்ணா ஆகியோர், 'மேலும் மூன்று துணை முதல்வர் பதவிகளை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் எங்கள் சமூகத்தினருக்கு நாங்கள் உதவ முடியும்' என, துணை முதல்வர்கள் பதவிக்கு துாண்டில் போட்டுள்ளனர். மிகுந்த பலத்துடன் ஆட்சி அமைத்தாலும், இப்படி ஏகப்பட்ட உள்குத்துகளால் காங்., மேலிடம் மிகவும் திண்டாடி வருகிறது.