UPDATED : பிப் 08, 2026 06:59 AM
ADDED : பிப் 08, 2026 05:41 AM

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தங்கள் இஷ்டத்திற்கு இலவச அறிவிப்புகளை அள்ளி வீசி வருகின்றன. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும்; மாநில நிதி நிலையைப் பற்றி யாருமே கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டார்; அதில், ஏகப்பட்ட இலவச சலுகைகள். 'லாட்லி பெஜனா' என்ற திட்டம் வாயிலாக, மகளிருக்கு அதிக பணம் தரப் போகிறார். இத்திட்டத்தை, முதலில் மத்திய பிரதேசத்தில், 2023 ல் பா.ஜ., அமல்படுத்தி மகளிர் ஓட்டுகளை அள்ளி வெற்றி பெற்றது.
அதையே தன் மாநிலத்திலும் செய்துள்ளார் மம்தா. இத்தோடு நிற்கவில்லை. வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டம், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், அவர்களுடைய உதவியாளர்களுக்கும் சம்பள உயர்வு, மாநில அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத பஞ்சப்படி உயர்வு என, இப்படி அள்ளி வீசியுள்ளார் மம்தா.
மேற்கு வங்க அரசின் கடன், 8 லட்சம் கோடி ரூபாய். அது மேலு ம் உயர்ந்தபடியே போகிறது. அரசின் 40,000 கோடி ரூபாய், 'லக் ஷ்மிர் பண்டார்' என்ற திட்டத்திற்கு செல்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மகளிரின் உதவித்தொகை, 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னொரு, 40,000 கோடி இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 'இதையெல்லாம் மேற்கு வங்க அரசு தாங்குமா?' என, அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பினாலும், அதைப் பற்றியெல்லாம் மம்தா கவலைப்படவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவரது குறிக் கோள்.

