'டில்லி உஷ்ஷ்ஷ்...': சட்டசபையில் கவர்னருக்கு ஆபத்து?
'டில்லி உஷ்ஷ்ஷ்...': சட்டசபையில் கவர்னருக்கு ஆபத்து?
ADDED : ஜன 18, 2026 04:41 AM

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, கடைசி முறையாக சட்டசபை இம்மாதம் 20ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் உரையை வாசிப்பார். கடந்தாண்டு, தமிழக அரசின் உரையை முழுதுமாக வாசிக்காமல், தன் கருத்துகளை மட்டும் பேசி, வெளியேறிவிட்டார் கவர்னர். 2024ம் ஆண்டும் இப்படித்தான் நடந்தது.
இந்த முறை கவர்னர் தமிழக அரசின் உரையை முழுதுமாக வாசிப்பாரா? கவர்னர் என்ன பேச வேண்டும் என்பதை தமிழக அரசின் நிதி அமைச்சகம் கவர்னருக்கு அனுப்பும். இப்படி இரண்டு முறை அரசு உரையை அனுப்பி, கவர்னர் திருப்பி அனுப்பி விட்டாராம்.
'இந்தியர்களுக்கு சுதந்திர வெறி ஊட்டிய, வந்தே மாதரம் குறித்து உரையில் குறிப்பிட வேண்டும்' என்று கூறினாராம் கவர்னர். 1857ம் ஆண்டு பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்டது இந்த பாடல்; இதன் 150வது ஆண்டு விழாவை மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
'தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது' என அரசு உரையில் குறிப்பிட்டுள்ளதை, கவர்னர் ஏற்க மறுத்துவிட்டாராம். 'பட்டியலின மக்கள் தாக்கப்படுகின்றனர்; அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என, பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், அமைதி பூங்கா என சொல்ல முடியாது' என, கறாராக பதில் அளித்துள்ளாராம் கவர்னர்.
'இவர், சட்டசபைக்கு 20ம் தேதி காலை வரும் போது, இவருடைய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படலாம்' என, மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளதாம். கவர்னர் ரவியும், இது தொடர்பாக அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த முறையும் கவர்னர் உரை பிரச்னையை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

