ADDED : டிச 29, 2024 06:25 AM

அரசியலிலும், சினிமாவிலும் பலவித நம்பிக்கைகள் வலம் வருகின்றன; இதை- மூட நம்பிக்கை எனவும் சொல்லலாம்-. பதவியேற்பு விழாவிற்கு நேரம் குறிப்பது, சினிமாவிற்கு பூஜை என, அனைத்திற்குமே ஒருவித நம்பிக்கை.
மஹாராஷ்டிர அரசியலில் இப்படி ஒரு நம்பிக்கை உள்ளது. இங்குள்ள அமைச்சர்களுக்கு, அரசு பங்களா ஒதுக்குகிறது. இப்படி ஒரு பங்களா மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ளது. 'ராம்டெக் பங்களா' என, இது அழைக்கப்படுகிறது.
இந்த பங்களாவில் வசித்த அமைச்சர்கள், மீண்டும் வெற்றி பெற்று வந்ததாக சரித்திரம் இல்லை. தேர்தலில் தோல்வி, ஊழலால் பதவி விலகல் அல்லது மரணம் இதுதான் ராம்டெக் பங்களாவின் சரித்திரம்.
இந்த பங்களா மட்டுமல்ல... மஹாராஷ்டிரா செகரட்ரியேட்டில் உள்ள அறை எண் 602ம் அதிர்ஷ்டமில்லாத அறை.
கடந்த 1995லிருந்து 1999 வரை இந்த பங்களாவில் வசித்தவர் பா.ஜ.,வின் கோபிநாத் முண்டே; இவர் டில்லியில் ஒரு விபத்தில் காலமானார். மாநில துணை முதல்வராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஜக்கன் புஜ்பல். இவருக்கு ராம்டெக் பங்களாவும், அலுவலக அறை 602ம் ஒதுக்கப்பட்டது; 'தெல்கி பத்திர பேப்பர்' ஊழலில் சிக்கினார் புஜ்பல்.
அடுத்ததாக, அறை எண் 602ல் இருந்தவர் அஜித் பவார்; இவரும் ஒரு ஊழல் விவகாரத்தில் சிக்கவே, பதவி விலக நேர்ந்தது. இப்போது, துணை முதல்வராக மீண்டு வந்தாலும், '602 அறையே வேண்டாம்' என சொல்லி விட்டார் அஜித்.
பா.ஜ., தலைவர் ஏக்நாத் கட்சே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி விலகினார். அடுத்து பா.ஜ.,வின் பாண்டுரங் பண்ட்கர், 2018ல் திடீரென காலமானார். அடுத்து பா.ஜ., அமைச்சர் அனில் போண்டே, 2019 சட்டசபை தேர்தலில் தோற்றுப்போனார். இப்போது, அறை எண் 602ஐ அதிகாரிகள் தான் பயன்படுத்துகின்றனர்.

