டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா?
டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா?
ADDED : ஜூன் 01, 2025 04:03 AM

கர்நாடகாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தாலும், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்கள் காங்., மேலிடத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு தனித்தனி கோஷ்டிகள் உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், சிவகுமாரின் விருப்பத்தை நிராகரித்து சித்தராமையாவை முதல்வராக்கினார் ராகுல். இரண்டரை ஆண்டு களுக்கு பின், நீங்கள்தான் முதல்வர் என சிவகுமாருக்கு அப்போது உறுதிமொழி தரப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் இந்த கெடு முடிவிற்கு வருகிறது.
சமீபத்தில், காங்கிரசின் கர்நாடக பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும், ராகுலுக்கு நெருக்கமாக உள்ள கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலும் பெங்களூரு வந்திருந்தனர். சிவகுமாரும், பரமேஸ்வரும் தனித்தனியாக இவர்களை சந்தித்தனர். தங்களுக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என, இருவருமே இந்த சந்திப்பின் போது கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மேலிட தலைவர்கள் முதல்வர் சித்தாராமையாவை சந்த்தித்தாலும், கட்சி விவகாரங்கள் குறித்து அதிகம் பேசவில்லையாம்.
சிவகுமாருக்கு முதல்வர் பதவி தராவிட்டால் கட்சி உடையுமோ என அஞ்சுகிறார் ராகுல். சித்தராமையாவை மாற்றுவது குறித்து, ராகுல் விரைவில் முடிவெடுப்பார் என கட்சி தலைவர்கள் சொல்கின்றனர்.