டில்லி உஷ்ஷ்ஷ்: நேரத்தை வீணாக்காதவர் பிரதமர் மோடி!
டில்லி உஷ்ஷ்ஷ்: நேரத்தை வீணாக்காதவர் பிரதமர் மோடி!
ADDED : செப் 29, 2024 12:35 AM

புதுடில்லி: 'வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் முக்கியம். நேரத்தை வீணாக்க வேண்டாம் என பெரியோர் சொல்வர். அதற்கு சிறந்த உதாரணம், பிரதமர் மோடி' என்கின்றனர் பா.ஜ.,வினர். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த வாரம் நடந்த சம்பவம் தற்போது பா.ஜ., வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த 26ல், மஹாராஷ்டிராவின் புனேவிற்கு பிரதமர் மோடி சென்று, அங்கு, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால், புனேவில் சரியான மழை; 'விமானம் இறங்க முடியாது' எனக் கூறி விட்டனர். இதனால், மோடியின் புனே, 'விசிட்' ரத்து செய்யப்பட்டது.
மற்ற நிகழ்ச்சிகளோ, அதிகாரிகள் கூட்டங்களோ நடத்த குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தேவைப்படும். இந்த இரண்டு மணி நேரம், எப்படி சும்மா இருப்பது...
அதனால், உடனே தன் உதவியாளர்களிடம் பிரதமர், 'ஹரியானாவில் உள்ள பா.ஜ., 'பூத் ஏஜன்ட்' அனைவரிடமும் போனில் பேச விரும்புகிறேன்; அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்' என்று கூறினார்.
உடனே, உதவியாளர்கள் அனைவரும், 400க்கும் மேற்பட்ட மொபைல் எண்களை தொடர்பு கொண்டு, 'பிரதமர் உங்களுடன் பேச இருக்கிறார்; 'லைனில்' காத்திருங்கள்' என, பூத் ஏஜன்ட்களை தயார் செய்தனர்.
பிரதமரும், 400க்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்களுடன், 'அடுத்த மாதம் நடக்க உள்ள, ஹரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும்; அதற்கு, உங்களுடைய கடுமையான உழைப்பு தேவை' என, அவர்களிடம் கூறினாராம் பிரதமர். அதுமட்டுமல்லாது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பணியாற்றிய போது, ஹரியானாவில் தான் சந்தித்த சுவாரஸ்யமான விஷயங்களையும், பூத் ஏஜன்டுகளுடன் பகிர்ந்து கொண்டாராம்.
மோடியின் இந்த போன் பேச்சு, ஹரியானா பா.ஜ.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'மீண்டும், பா.ஜ., ஆட்சியில் அமரும்' என, உறுதியாக அவர்கள் சொல்கின்றனர்.