'டில்லி உஷ்ஷ்ஷ்...'; துணை முதல்வரை பாராட்டிய பிரதமர்!
'டில்லி உஷ்ஷ்ஷ்...'; துணை முதல்வரை பாராட்டிய பிரதமர்!
ADDED : ஜன 18, 2026 05:42 AM

ஆந்திராவில், தெலுங்கு தேசத்தின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வர், பவன் கல்யாண் துணை முதல்வர். சினிமா நடிகராக வலம் வந்த, பவன் கல்யாண், ஜனசேனா என்கிற கட்சியை துவங்கி, இப்போது அதன் தலைவராகவும் உள்ளார். இவருக்கும், பிரதமர் மோடிக்கும் நல்ல நட்பு உள்ளது. இவர் வாயிலாக தான், தெலுங்கு தேசம் பா.ஜ., கூட்டணியில் இணைந்தது.
பவன் கல்யாணை எப்போது சந்தித்தாலும், 'இவர் ஒரு புயல், சூறாவளி' என வர்ணிப்பார் மோடி. ஒரு மாதத்திற்கு முன், ஜப்பானின் கென்ஜுஸ்டு என்கிற, தற்காப்பு கலையை கற்று தேர்ந்து, பட்டம் பெற்றுவிட்டார் பவன் கல்யாண்; இந்த செய்தி, தெலுங்கு பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதை எப்படியோ பிரதமர் மோடியின் குழுவில் உள்ளவர்கள் கண்டுபிடித்து, மோடிக்கு தெரிவித்தனர். உடனே பவன் கல்யாணுக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதிவிட்டார் மோடி.
'நீங்கள் தொடர்ந்து இந்த தற்காப்பு கலையை கடைபிடித்து வருகிறீர்கள். இது, இளைய சமுதாயத்தினருக்கு ஒரு அருமையான செய்தி. அவர்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன்னோடியாக திகழ்கிறீர்கள். தற்காப்பு கலை உடல் வலிமைக்கும் மட்டுமல்ல, மன வலிமைக்கும் உதாரணமாக உள்ளது. 'இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்' என, நான் கூறி வரும் நிலையில், உங்களின் இந்த சாதனை பாராட்டக் கூடியது' என்று, தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மோடி.
இந்த கடிதத்தை தன், 'எக்ஸ்' பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதுவரை, 40 லட்சத்திற்கும் மேலானவர்கள் மோடியின் இந்த பதிவைப் பார்த்துள்ளனர். 'எங்கோ தெலுங்கு மீடியாவில் வெளியானதை கண்டுபிடித்து, ஒரு செய்தியாக்கி விட்டார் பிரதமர் மோடி; இதுதான், அவருடைய பலம்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.

