டில்லி உஷ்ஷ்ஷ்: பெயரை குறிப்பிடாமல் சாதித்த அமைச்சர்
டில்லி உஷ்ஷ்ஷ்: பெயரை குறிப்பிடாமல் சாதித்த அமைச்சர்
ADDED : மார் 16, 2025 12:30 AM

புதுடில்லி: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க., - எம்.பி.,க்களை பார்லிமென்டில் கடுமையாக சாடினார். 'தி.மு.க., - எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள்' என, அவர் சொன்னதை வழக்கம் போல, 'தமிழர்களை திட்டிவிட்டார்' என, மடை மாற்றினர். இதற்காக வருத்தம் தெரிவித்தார் பிரதான்.
இது நடந்த மறுநாள், சபையில் தி.மு.க.,வை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வறுத்தெடுத்தார். ஈ.வெ.ரா., பெயரை குறிப்பிடாமல், 'தமிழை காட்டுமிராண்டி பாஷை என சொன்னவரை தி.மு.க.,வினர் தலைவராக கருதுகின்றனர்.
'அவர் படம் இல்லாத இடம் இல்லை. பார்லிமென்ட் தி.மு.க., அலுவலகத்திலும் அவர் படம் உள்ளது...' என்றார். தி.மு.க., - எம்.பி.,க்கள் பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றனர். ஈ.வெ.ரா., என பெயரைச் சொன்னால், 'சபையில் இல்லாதவர் பெயரை எப்படி சொல்லலாம். சபை குறிப்பிலிருந்து நீக்குங்கள்' என, தி.மு.க.,வினர் சொல்வர் என்பதை அறிந்து கொண்ட நிர்மலா, பெயரைச் சொல்லாமல் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டார்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும், தர்மேந்திர பிரதானும், இதற்காக நிர்மலாவை பாராட்டினர். பேச்சை முடித்துவிட்டு நிதி அமைச்சர் வெளியே வந்தார். அப்போது சில தி.மு.க., - எம்.பி.,க்கள் நிர்மலாவை சந்தித்தனர். 'என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே... எங்க மானத்தை வாங்கிட்டீங்களே...' என, வருத்தப்பட்டனராம்.