ADDED : ஜன 11, 2026 03:18 AM

வழக்கமாக, மத்திய பட்ஜெட், பிப்ரவரி கடைசியில் தாக்கல் செய்யப்படும். இதை மாற்றியவர் பிரதமர் மோடி. அப்போது, மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, '2017லிருந்து பிப்., 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்' என, 2016ல் அறிவித்தார். இதனால், 2017லிருந்து பிப்., 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு காரணம், பட்ஜெட் மீது அனைத்து விவாதங்களும் முடிவடைந்து, நிதி ஆண்டான ஏப்ரலிலிருந்து புதிய பட்ஜெட் அமலுக்கு வரும் என்பது தான்!
இந்தாண்டு, பிப்., 1 ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அன்று, அரசு அலுவலகங்கள், பங்குச்சந்தை என அனைத்துமே விடுமுறை தான். அன்று எப்படி பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்? இதனால், 'பட்ஜெட்டை 2ம் தேதியான, திங்கள் அல்லது ஜன., 31ம் தேதி சனிக்கிழமையன்று தாக்கல் செய்யலாம்' என, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரிடம் கூறினாராம்.
மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும், பிரதமரிடம் இது தொடர்பாக பேசினராம். 'பட்ஜெட்டிற்கும், பங்குச்சந்தை மற்றும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்பு உண்டு. ஞாயிறன்று பட்ஜெட் தாக்கல் செய்தால் பிரச்னை வரும்' என, கூறினராம். நிதி செயலராக பணியாற்றி, தற்போது கேபினட் செயலராக உள்ள டி.வி.சோமநாதனும், மோடியிடம், 'ஞாயிறன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டாம்' என்றாராம்.
ஆனால், பிரதமர் மோடி பிடிவாதமாக இருந்தாராம். 'நாம் ஆட்சிக்கு வந்த பின், 2017லிருந்து பிப்., 1ல் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது; அது தொடரும்' என, கறாராக சொல்லி விட்டாராம். 'பிரதமர் மோடி நினைத்ததை முடிப்பவர்' என, பா.ஜ.,வினர் அவரை பாராட்டுகின்றனர்.

