'அரசு அலுவலக குப்பையில் கொசு முட்டை அகற்றாமல் டெங்குவை ஒழிக்க முடியாது!'
'அரசு அலுவலக குப்பையில் கொசு முட்டை அகற்றாமல் டெங்குவை ஒழிக்க முடியாது!'
ADDED : நவ 09, 2024 01:56 AM

சென்னை: 'தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கும், 'ஏடிஸ்' கொசு முட்டைகளை அகற்றாமல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாது' என, பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:
காவல் நிலையங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ரயில்வே, போக்குவரத்து பணிமனைகள் மற்றும் வீடுகளின் மொட்டை மாடிகளிலும், திறந்தவெளி இடங்களிலும், டயர்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் பல மாதங்களாக போடப்பட்டு உள்ளன.
ஏடிஸ் கொசுவை பொறுத்தவரை, டெங்கு பாதித்தவரை கடித்து விட்டு, அவை முட்டையிட்டால், அந்த முட்டையில் இருந்து வெளிவரும் கொசுக்களிலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் தன்மை இருக்கும்.
அதனால் தான், மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு முன் வரை, 8,000க்கும் கீழ் தான் டெங்கு பாதிப்பு இருந்தது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டும், 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும். அதற்கு வீடுகள், சுற்றுப்புறங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றாததே முக்கிய காரணம்.
டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் போது, அதிலுள்ள கொசு முட்டைகள் புழுவாக உருவாக முடியாது.
அதேபோல, தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றி, குப்பை கிடங்குகளில் கொட்டி அழுத்தும் போது, முட்டை கொசுவாக மாறும் சதவீதமும் குறையும்.
எனவே, தேங்கிக் கிடக்கும் கொசு முட்டைகளை அகற்றாமல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது சிரமம்.
இவ்வாறு அவர் கூறினார்.