UPDATED : ஜன 03, 2024 04:14 AM
ADDED : ஜன 03, 2024 01:26 AM

திருச்சி வந்த பிரதமர் மோடியை வரவேற்க, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி வராததற்கு, அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைவே காரணம் என்கிறது, அக்கட்சி வட்டாரம்.
இதுகுறித்து, புதிய தமிழகம் கட்சியினர் கூறியதாவது: திருச்சி வந்திருந்த பிரதமரை சந்திக்க, கிருஷ்ணசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால், வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டபோது, அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனால், அவரால் திருச்சி செல்ல முடியவில்லை.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைய வேண்டும் என்று, கிருஷ்ணசாமி விரும்புகிறார். இந்த கூட்டணியில் சேர்ந்து, தென்காசி தொகுதியில் போட்டியிட நினைக்கிறார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், அங்கு தேர்தல் பணிகளை துவக்கி விட்டார். தென்காசி மாவட்டம் வெள்ளத்தால் பாதித்த போது, கிராம மக்கள் உணவுக்காக, அரசிடம் கையேந்தாமல் இருக்க, தன் சொந்த செலவில், உணவு தயாரித்து வழங்கினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -