ADDED : மார் 03, 2024 04:43 AM

புதுடில்லி அரசியல்
வட்டாரங்களில் ஒரு விஷயம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது! அது, ராகுலின்
பிரிட்டன் பயணம். சமீபத்தில், ராகுல் தன் பாத யாத்திரையை நிறுத்திவிட்டு,
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கல்லுாரி ஒன்றில் உரையாற்ற
சென்றார்.
'கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ராகுலை அழைத்துள்ளது' என,
காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'உண்மை அதுவல்ல' என்கிற தகவல்,
தற்போது வெளியாகி உள்ளது. 'ராகுலை உரையாற்ற அழைக்கவில்லை' என, கேம்பிரிட்ஜ்
பல்கலைக் கழகத்தின் ஜீசஸ் கல்லுாரி தெரிவித்துள்ளது.
பின் எதற்கு
காங்கிரசும், ராகுலும் பொய் சொல்ல வேண்டும்? இதற்கு காங்கிரஸ்
தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.'ராகுலின் நிகழ்ச்சி பணம் செலுத்தி
நடத்தப்பட்டது' என, மேலும் ஒரு குண்டைத் துாக்கிப் போட்டுள்ளது,
பிரிட்டனின் தலைசிறந்த அந்த பல்கலைக்கழகத்தின் கல்லுாரி.
இது காங்.,
தொண்டர்களை பெரிதும் பாதித்துள்ளது. 'தேவையில்லாமல் பிரச்னையில் ஏன்
மாட்டிக் கொள்கிறார் ராகுல்' என, வெறுத்து போயுள்ளனர் தொண்டர்களும்,
தலைவர்களும்.
ஹிமாச்சல காங்., அரசு கவிழும்?
ஹிமாச்சல
பிரதேசத்தில் ராஜ்யசபா காங்., வேட்பாளர் தோற்ற பின், சுக்விந்தர் சுகு
தலைமையிலான காங்., அரசு கவிழ்ந்து விடும் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதிருப்தி காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்;
இதனால் காங்., அரசு பிழைத்தது.
ஆனால், பிரச்னை ஓய்ந்த பாடாக இல்லை.
ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரசை வளர்த்தவர், மறைந்த முன்னாள் முதல்வர்
வீர்பத்ர சிங். இவரது மனைவி, பிரதிபா சிங்.
சட்டசபை தேர்தலில்
காங்., வெற்றி பெற்ற போது, முதல்வர் பதவி கிடைக்கும் என, அவர்
எதிர்பார்த்தார்; ஆனால், பிரியங்காவிற்கு நெருக்கமான சுக்விந்தர் சிங் சுகு
முதல்வரானார். பிரதிபா சிங் ஹிமாச்சல மாநில காங்., தலைவராகவும் உள்ளார்.
சுக்விந்தருக்கு
எதிராக பல எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். தற்போது முதல்வரை
மாற்றினால் பிரச்னை பெரிதாகும் என்பதால், காங்., எதுவும் செய்யாமல்,
தேர்தல் முடியட்டும் என, காத்திருக்கிறது.
பா.ஜ.,வும், 'இப்போது
அமைதியாக இருப்போம். இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் முடிந்து விடும்;
அப்போது பார்த்துக் கொள்வோம்' என, அமைதியாக உள்ளது.
லோக்சபா தேர்தல்
முடிந்தவுடன், ஹிமாச்சல காங்., அரசு நீடிப்பது சந்தேகம் என்பது, அரசியல்
நோக்கர்களின் கருத்து. வடமாநிலங்களில், காங்., ஆட்சி செய்யும் ஒரே மாநிலம்
ஹிமாச்சல பிரதேசம் தான்; அதுவும் போனால் காங்கிரசின் நிலை மிக பரிதாபம்
தான்!

