பி.எப்.,பில் 'டிஜிட்டல்' மாற்றம்: அடுத்த மாதம் அறிமுகம்
பி.எப்.,பில் 'டிஜிட்டல்' மாற்றம்: அடுத்த மாதம் அறிமுகம்
UPDATED : ஏப் 19, 2025 03:42 AM
ADDED : ஏப் 19, 2025 12:43 AM

ராஞ்சி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான இணையத்தில், மிகப்பெரிய அளவில், மாற்றம் கொண்டு வரப்படுவதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார்.
நாடு முழுதும் தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணி நிறைவில் பணப்பலன் உள்ளிட்டவை வழங்கும் வகையில், ஈ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுகிறது.
இதில், 9 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ள நிலையில், பி.எப்., கணக்கில் இருந்து பணம் எடுப்பது, ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கில், பெரிய அளவில் டிஜிட்டல் மாற் றம் அறிமுகமாகிறது.
இது குறித்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அளித்த பேட்டி:
பி.எப்.,பில் தற்போது, 27 லட்சம் கோடி ரூபாய் பணம் உள்ளது. கடந்த 2024 - -25ம் நிதியாண்டில், சந்தாதாரர்களிடம் இருந்து, 3.41 லட்சம் கோடி வசூலானது. சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, 8.25 சதவீத உத்தரவாத வட்டி வழங்கப்படுகிறது.
பி.எப்., வாயிலாக, 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுகின்றனர். பி.எப்., பணத்தை பெறுவதற்கான தானியங்கி உரிமை கோரல், சந்தாதாரர்கள் விபரங்களை டிஜிட்டல் வாயிலாக திருத்தம் செய்வது, ஏ.டி.எம்., வாயிலாக பணம் பெறுவது போன்ற சேவைகளை தடையில்லாமல், மிக எளிமையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, மிகப்பெரிய அளவில் பி.எப்., இணையதள பக்கத்தில் டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டு, 'ஈ.பி.எப்.ஓ. -3.0' என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிய, நவீனமயமாக்கப்பட்ட இந்த இணையதள சேவையானது, மே - -ஜூன் மாதங்களில் அறிமுகமாகிறது. பி.எப்.,பை மிக எளிதில் அணுகக் கூடியதாக மாற்றுவதே இதன் நோக்கம்.
இந்த புதிய மாற்றமானது, பி.எப்., பணத்தை எடுக்க மிக சிக்கலான, நீண்ட படிவம் நிரப்பும் முறையை நீக்கும். திருத்தங்கள் மற்றும் பணம் பெறுவது தொடர்பான கோரிக்கைகளுக்காக பி.எப்., அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
ஒரு முறை கடவுச் சொல் வாயிலாகவே, பி.எப்., கணக்குகளை புதுப்பித்துக் கொள்ளவோ, மேம்படுத்திக்கொள்ளவோ முடியும். ஓய்வூதியம், பணம் எடுப்பது போன்றவற்றையும் டிஜிட்டல் முறையிலேயே கண்காணிக்கலாம்.
'ஈ.பி.எப்.ஓ., -2.0' டிஜிடல் முறையால், குறை தீர்க்கும் முறை மேம்படுத்தப்பட்டு, புகார்களின் அளவு பாதியாகக் குறைந்தது. தற்போது, 'ஈ.பி.எப்.ஓ., -3.0' அறிமுகமானதும் பி.எப்., செயல்திறன் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

