மத பயன்பாட்டு கட்டடங்கள்: என்.ஓ.சி., பெறுவதில் சலுகை
மத பயன்பாட்டு கட்டடங்கள்: என்.ஓ.சி., பெறுவதில் சலுகை
UPDATED : ஜன 12, 2026 06:10 AM
ADDED : ஜன 12, 2026 04:56 AM

சென்னை: தமிழகத்தில், மதம் சார்ந்த பயன்பாட்டுக்கான கட்டடங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, கலெக்டரின் தடையின்மை சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், நெரிசலாக குடியிருப்புகள் உள்ள இடங்களில், மதம் சார்ந்த கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்படுகின்றன. குறிப்பாக, குடியிருப்பு என, திட்ட அனுமதி பெற்றவர்கள், அவற்றை ஜெபக்கூடமாக பயன்படுத்துவதாக புகார் எழுகிறது.
இதுதொடர்பான வழக்குகளில், விதிமீறல் இருப்பது உறுதியான நிலையில், சம்பந்தப்பட்ட கட்டடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
கடந்த மாதம் சென்னையில் ஒரு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'மதச்சார்பு கட்டடங்களுக்கு, கலெக்டரின் தடையின்மை சான்று கேட்காமல் கட்டட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்தார்.
இதுதொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள அரசாணை:
கலெக்டரின் தடையின்மை சான்று கேட்காமல், மதச்சார்பு கட்டடங்களுக்கு, ஒப்புதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2019 முதல், 2024 வரை, பொதுக்கட்டட விதிகளின்படி, குடியிருப்பு, அரங்கம் போன்ற பெயர்களில் கட்டட அனுமதி பெற்று, அதை தற்போது மதம் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்தினால், அத்தகைய கட்டடங்களுக்கு, கலெக்டரின் தடையின்மை சான்று கேட்க வேண்டாம்.
மதச்சார்பு நோக்கங்களுக்காக, 2019 - 2024 வரையிலான கால கட்டத்தில், கட்டட அனுமதி கோரிய விண்ணப்பங்கள், கலெக்டரின் தடையின்மை சான்றுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
கலெக்டரின் தடையின்மை சான்று கேட்காமல், இந்த விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கலாம். மதச்சார்பு நோக்கங்களுக்காக திட்ட அனுமதி கோரி, 2024 மார்ச், 7க்கு பின் தாக்கலான விண்ணப்பங்களுக்கும், மாவட்ட கலெக்டரின் தடையின்மை சான்றிதழ் கேட்காமல் திட்ட அனுமதி வழங்கலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

